நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வங்கித் துறையில் வேலைவாய்ப்புகளை (Jobs) வழங்கும் விதமாக, பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank PNB) உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer – LBO) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 750 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 85 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வங்கிப் பணியில் சேர ஆர்வமுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 23, 2025 என்பதால், தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
- பதவியின் பெயர்: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer – LBO – Junior Management Grade Scale-I – JMGS-I)
- மொத்த காலியிடங்கள்: நாடு முழுவதும் 750 பணியிடங்கள்.
- தமிழ்நாட்டில் காலியிடங்கள்: 85 (SC – 12, ST – 6, OBC – 22, EWS – 8, பொது – 37, மாற்றுத்திறனாளிகளுக்கு – 3).
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: நவம்பர் 03, 2025
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: நவம்பர் 23, 2025
- ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேச தேதி: டிசம்பர் 2025 / ஜனவரி 2026
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். இத்துடன், ரிசர்வ் வங்கி (RBI) சட்டம், 1934 இன் இரண்டாம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் கிளார்க் அல்லது அதிகாரி பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் 23.11.2025 தேதிக்குள் உரிய மதிப்பெண் மற்றும் டிகிரி சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள் (01.07.2025 அன்று)
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வுகள் வழங்கப்படும். அதன்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு (NCL) 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு.
உள்ளூர் மொழித் திறன் அவசியம்
தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழியைப் பேச, எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்தவர்கள் உள்ளூர் மொழித் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் மற்றும் சலுகைகள்
தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும். இத்துடன், வங்கி விதிகளின்படி பல்வேறு கூடுதல் அலவன்ஸ்களும் கிடைக்கும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/PwBD பிரிவினருக்கு: ₹59/-
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ₹1180/-
கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
தேர்வு செயல்முறையானது நான்கு கட்டங்களைக் கொண்டிருக்கும்:
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test): 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வில் ஆப்டிட்யூட், கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/வங்கி தொடர்பான அறிவு கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 150 கேள்விகள், 3 மணி நேரம். நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.
- ஆவண சரிபார்ப்பு (Screening of Documents).
- உள்ளூர் மொழித் திறன் தேர்வு (Language Proficiency Test – LLPT): 10 அல்லது 12 ஆம் வகுப்பில் தமிழ் மொழிப் பாடம் படித்தவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.
- நேர்காணல் (Personal Interview): இது 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஆன்லைன் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான https://pnb.bank.in/ அல்லது https://ibpsreg.ibps.in/pnboct25/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து தகுதிகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வங்கித் துறையில் ஒரு நிலையான மற்றும் சிறப்பான வாழ்க்கையைத் தொடங்க இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
