அடுத்த 100 நாட்கள்… ஆர்பிஐ அதிகாரிகளுக்கு மோடி கொடுத்த அசைன்மென்ட்!

Published On:

| By Selvam

“அடுத்த 100 நாட்களில் ரிசர்வ் வங்கி தொடர்பான புதிய கொள்கைகளை உருவாக்குங்கள், நான் பிரதமராக பதவியேற்றதும் உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும்” என்று வங்கி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 1) பேசினார்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் 90-வது ஆண்டு விழா மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது,

“கடந்த 2014-ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 80-ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டபோது, நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வங்கித் துறையும் பிரச்சனைகள் மற்றும் சவால்களுடன் போராடிக் கொண்டிருந்தது. வங்கி முறையின் ஸ்திரத்தன்மை மற்றும் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் இருந்தது.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு போதுமான ஊக்கத்தை பொதுத்துறை வங்கிகளால் வழங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவின் வங்கி அமைப்பு உலகில் வலுவான மற்றும் நிலையான வங்கி அமைப்பாக பார்க்கப்படுகிறது.

எங்களின் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் முடிவுகள் தெளிவாக இருந்ததால் தான் இந்த மாற்றம் வந்துள்ளது. எங்களின் முயற்சியில் ஸ்திரத்தன்மையும் நேர்மையும் இருந்தது. நோக்கங்கள் தெளிவாக இருந்தால், கொள்கைகள் சரியாக இருக்கும்.

இந்தியாவில் 52 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அவற்றில் 55% க்கும் அதிகமானவை பெண்களின் வங்கிக் கணக்குகளாகும். 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் கிசான் கடன் அட்டை வைத்துள்ளனர். நமது கிராம பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறை மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தற்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக உள்ளது. யுபிஐ-இல் மாதந்தோறும் 1,200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

கடந்த 10 வருடங்களில் வங்கி துறையில் நடைபெற்ற மாற்றங்கள் வெறும் ட்ரெய்லர் தான். இன்னும், நம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நிறைய செய்ய வேண்டியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான நமது இலக்குகள் மிகத் தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த 100 நாட்களுக்கு நான் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருக்கிறேன், எனவே நீங்கள் புதிய கொள்கைகள் பற்றி சிந்திக்க நிறைய நேரம் உள்ளது. ஏனென்றால், பதவியேற்பு விழா முடிந்து ஒரு நாள் கழித்து, உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு, சைரன் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share