திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று (டிசம்பர் 23) சந்தித்து பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் நியமித்த 5 பேர் குழு அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது. அதே நேரத்தில் காங்கிரஸின் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில் விஜய்யை சந்தித்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி மீது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் ஸ்டாலினை சந்தித்த ஐவர் குழுவின் தலைவரான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “கூட்டணி குறித்து டிசம்பர் 15-ந் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் வலியுறுத்தி இருந்தோம்; இப்போது பந்து திமுக கையில்தான் இருக்கிறது; திமுகவின் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என கூறியிருந்தார்.
இதேபோல காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், விஜய்க்குஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். இவை அனைத்தும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.
