தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வேறுவழியே இல்லாமல் தனிக்கட்சியை அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். OPS to Announce ‘Amma MGR DMK’ Party on July 20!
தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வகித்தவர்; அதிமுகவில் தர்ம யுத்தம் நடத்தி பரபரப்பை கிளப்பியவர்; பாஜக தயவால் அதிமுகவில் மீண்டும் நுழைந்து துணை முதல்வரானவர் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் விஸ்வரூபத்தை ஏற்க முடியாமல் மீண்டும் மல்லுகட்டியதால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். ஆனால் தாமே உண்மையான அதிமுக கூறி வந்த ஓபிஎஸ், பாஜகவின் கரங்களை கெட்டியாகவே பிடித்துக் கொண்டார். மீண்டும் பாஜக தலையிடும்.. அதிமுகவில் நுழைந்து விடமுடியும் என கனவு கண்ட ஓபிஎஸ்-க்கு அது நிறைவேறாத நிராசையாகவே போய்விட்டது. ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவே முடியாது என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக நிற்பதால், பாஜகவும் ஓபிஎஸ்ஸை கை கழுவிவிட்டது.
இதனையடுத்து என்ன செய்வது? என்பது தொடர்பாக சென்னை அபிராமபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஓபிஎஸ் தமது ஆதரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட நிர்வாகிகள், “அடுத்து என்னதான் செய்யப் போகிறோம்? சட்டமன்ற தேர்தலில் யாருக்குதான் ஓட்டு கேட்கப் போகிறோம்? யாருக்குத்தான் பிரசாரம் செய்யப் போகிறோம்” என சலிப்பாகவே பேசியிருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “நாம தனிக்கட்சியை தொடங்கும் முடிவை செயல்படுத்த வேண்டியதுதான். ஜூலை 20-ந் தேதி அம்மா எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கும் அறிவிப்பு வெளியாகும்” என சொல்லி சமாளித்தாராம் ஓபிஎஸ். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறதாம்.
அத்துடன், ஓபிஎஸ் தொடங்கும் அஎதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெறுமாம். அதே கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அதிமுக ஆகியவையும் இடம் பெறுமாம். இப்படி ஒரு கணக்குப் போட்டு காத்திருக்கும் ஓபிஎஸ்-க்கு பாஜக என்ன பதில் தரப்போகிறது? என்பதில்தான் ட்விஸ்ட்டே இருக்கிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.