அக்னி நட்சத்திரம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் (84.2 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பம் பதிவாகியுள்ளது.
குளிர்ச்சி நிறைந்த கோடை வாசஸ்தலமான ஊட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வனப்பகுதிகளும் வறண்டு காணப்படுகிறது. தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான நீர் நிலைகளிலும் இருப்பு தரைத் தட்டி வருகிறது.
இந்த நிலையில், ஊட்டி வரலாற்றில் முதன்முறையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது. 1951-ம் ஆண்டில் இருந்து ஊட்டியில் பதிவான வெப்பநிலையில் இதுவே அதிகமாகும். கடந்த 73 ஆண்டுகளில் முதன்முறையாக வெப்பம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஊட்டியின் வெப்பநிலை வரும் சில நாள்களுக்கு மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டியை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால் ஊட்டியையே வெப்பம் வாட்டத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை கண்டிராத வெப்பநிலையைக் கண்டு ஊட்டி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!