ஆரணி அருகே ஆடிப்புர திருவிழாவில் ஒரு வடையை ரூ.7,000-க்கு ஏலம் எடுத்து உட்கொண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வடை சுட்டு வெறும் கைகளால் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 22) துரிஞ்சுகுப்பம் கிராமத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொதிக்கும் எண்ணெய்யில் இருந்து வடையை எடுப்பதற்காக கிராமத்தில் உள்ள 3 பூசாரிகள் 21 நாள் விரதம் இருந்து அதனை வெறும் கையால் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பூசாரிகள் கொதிக்கும் எண்ணெய்யில் இருந்து வடையை எடுக்கும் போது பக்தர்கள் அரோகரா என்று பக்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து வெறும் கைகளால் எடுத்த வடையை கோவில் நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. குறிப்பாக கொதிக்கும் எண்ணெய்யிலிருந்து எடுக்கப்பட்ட 7 வடைகள் மட்டுமே ஏலம் விடப்படுவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு ஒரு வடை ரூ.100-ல் தொடங்கி ரூ.7,000 வரை ஏலம் போனது. மொத்தம் 7 வடைகளும் ரூ.30,000 வரை ஏலம் விடப்பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் இந்த வடையை ஏலம் எடுக்கின்றனர்.
இந்த வடையை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.
மோனிஷா
