பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாநில கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இது இரு கல்லூரி மாணவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சில கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து மோதிக் கொள்வது, பேருந்து ஓட்டுநர் நடத்துநர் இடையே பிரச்சினை செய்வது, பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வது, ரூட் தல என்ற பெயரில் மோதிக் கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட ரூட் தல பிரச்சினையால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆ.சுந்தர் . இவர் மாநில கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 4ஆம் தேதி கல்லூரி முடிந்த பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சுந்தரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பியோடினர்.
ரூட் தல பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இதில் படுகாயமடைந்து கடந்த 4ஆம் தேதி முதல் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர் இன்று (அக்டோபர் 9) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில், பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வர் (19), ஹரி பிரசாத் (20) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பச்சையப்பன், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதல் காரணமாக மாநிலக் கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டும் கல்லூரியை விட்டு வெளியே செல்ல மறுத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வாழ்வும் சாவும் உங்கள் கையில்! லெபனான் மக்களுக்கு நெதன்யாகு அறிவுரை!
”ரெப்போ வட்டி விகிதத்தில் 10வது முறையாக மாற்றமில்லை” : ரிசர்வ் வங்கி