கைவிரித்த அதிமுக, தவெக.. ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளில் தனிக்கட்சி தொடங்கும் மனைவி பொற்கொடி!

Published On:

| By vanangamudi

Porkodi New Political Party

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனிக்கட்சி தொடங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கிவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. On Armstrong Memorial Day, Wife Porkodi to Launch New Political Party!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொறுப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதியன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெளியிட்ட அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சி தனது தமிழ்நாடு மண்டல கட்டமைப்பை மறுசீரமைத்து புதிய பொறுப்பாளர்களின் விவரங்களை வெளியிடுகிறது. எங்கள் தேசிய தலைவரின் உத்தரவின்படி,பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் கவனித்து கொள்வார் என தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சிப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கல் ஏற்கவில்லை.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பொற்கொடி இணைவார் என கூறப்பட்டது. ஆனால் விஜய் கட்சியில் இருந்து அவருக்கு எந்த அழைப்பும் வரவில்லையாம்.

இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தோல்வி அடைந்ததாம். இதனால் இறுதி கட்டமாக, புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறாராம் பொற்கொடி.

இது தொடர்பாக பொற்கொடிக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, அதிமுகவில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் மாதவரம் மூர்த்தி ஆகியோர் பொற்கொடியுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பின்னர் பொற்கொடியின் வழக்கறிஞர் ஒருவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பொற்கொடிக்கு 1 எம்.எல்.ஏ. சீட் மற்றும் அதிமுகவில் கட்சி பதவி கேட்கப்பட்டதாம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, “உங்களது ஆதரவாளர்களில் எத்தனை பேர் கவுன்சிலர்கள்?” என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ‘ஒருவருமே இல்லையே’ என பதில் தந்துள்ளார் பொற்கொடி வக்கீல். “ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில் எம்.எல்.ஏ. சீட் மற்றும் கட்சிப் பதவி கொடுப்பது எப்படி சரியாக வரும்? கட்சியில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலில் பணியாற்றட்டும்.. தேர்தல் முடிந்த பிறகு உள்ளாட்சி தேர்தலில் உரிய இடங்கள் வழங்குவோம். கட்சிப் பதவிகள் குறித்து பின்னர் பார்த்து கொள்ளலாம்” என சொல்லி அனுப்பினராம் எடப்பாடி.

இதனை ஏற்க பொற்கொடிக்கு விருப்பம் இல்லையாம். இதனால் ஆம்ஸ்ட்ராங் நினைவு தினமான ஜூலை 5-ந் தேதி புதிய அரசியல் கட்சியை அறிவிக்கப் போகிறாராம் பொற்கொடி என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share