}
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களை ஜி.எஸ்.டி. அமலான பின்னர் அதிகளவிலான வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று முன்னறிவிப்பு செய்துள்ளன.
ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படவிருக்கிறது. அதன்பின்னர் தற்போதுள்ள அனைத்து வரி விகிதங்களும் மாற்றப்பட்டு புதிய வரி முறை நடைமுறைக்கு வரும். தற்போது கிரெடிட் கார்டுகளுக்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட்டு வருகிறது. நிதிச் சேவைகள் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி-யில் 18 சதவிகித வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்பி வருகின்றன.
எஸ்.பி.ஐ. கார்டு நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்களுக்கு, ‘முக்கிய அறிவிப்பு: ஜூலை 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகம் செய்யவிருக்கிறது. எனவே தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவிகித சேவைக் கட்டணம் 18 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு, ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற செய்திகளை அனுப்பியுள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்சியல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிதி மேலாண்மைக் கட்டணம் மற்றும் பிரிமியம் கட்டணங்கள் ஜி.எஸ்.டி-யில் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
