சிறந்த கேப்டன், பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ். தோனி, ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை விதைத்துள்ளது. MS dhoni inducted in ICC hall of fame
நெருக்கடியான அதிக மன அழுத்தம் கொடுக்கும் கிரிக்கெட் மைதானத்தில் அமைதியாகவும், ஒப்பிடமுடியாத கேப்டன்ஷிப் திறமையுடனும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவங்களில் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் முன்னாள் இந்திய வீரரான எம்.எஸ். தோனி.
சர்வதேச அளவில் இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 538 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி ஒரு இரட்டை சதம், 16 சதம் மற்றும் 108 அரைசதங்களுடன் 17,266 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக 829 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, அவரது அசாதாரணமான உடற்தகுதி மற்றும் ஆட்டத்திறனின் பிரதிபலிப்பு.
இந்த கௌரவம் என்றென்றும் நிலைத்திருக்கும்! MS dhoni inducted in ICC hall of fame
இந்த நிலையில் தான் தோனியின் பெயர் ஐசிசியின் ஹால் ஆஃப் பேமில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
இதுதொடர்பாக தோனி கூறுகையில், ”இந்த கௌரவம் என்றென்றும் என்னுடன் இருக்கும். தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதிலுமிருந்து கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் பெயர் இடம்பெறுவது ஒரு மரியாதை. இதுபோன்ற எல்லா காலத்திலும் சிறந்து விளங்கிய வீரர்களுடன் என் பெயரையும் நினைவில் கொள்வது ஒரு அற்புதமான உணர்வு” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். MS dhoni inducted in ICC hall of fame

இந்திய கிரிக்கெட்டை தாக்கிய புயல்! MS dhoni inducted in ICC hall of fame
2004 இல் மகேந்திர சிங் தோனி என்ற வீரர் இந்திய அணியில் நுழைந்தபோது, ஒரு 23 வயதான விக்கெட் கீப்பர்-பேட்டர் ஒரு மாபெரும் புரட்சியை செய்யப் போகிறார் என்பதை யாரும் அறியவில்லை. ஏனெனில் அப்போதிருந்த சச்சின், கங்குலி, சேவாக் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும்போது அவர் சாதாரண வீரராக தான் எல்லோருக்கும் தோன்றினார்.
ஆனால் மைதானத்தில் ஒரு விக்கெட் கீப்பராக தோனியின் கிளவுஸ் மரபுகளை மீறியது. ஸ்டம்புகளுக்குப் பின்னால் தோனியின் மதிநுட்பம் வழக்கத்திற்கு மாறாக, அசாதாரணமாக இருந்தது. விக்கெட் கீப்பிங்கில் தனக்கென்று புதிய ஸ்டைலை கொண்டு வந்தார். வீரர்கள் எல்லையில் இருந்து வீசும் பந்தை செல்லமாக தட்டிவிட்டு, ஸ்டம்பை பார்க்காமலே பேட்ஸ்மேன்களை அவுட் செய்தார், தரையில் இருந்து பேட்ஸ்மேன்கள் காலை தூக்கிய கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து முடித்தார். கேட்சுகளை தனக்கென ஒரு பாணியில் பாயும் புலியாக பிடித்தார் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
அதே போன்று பேட்டிங்கில், முரட்டுத்தனமான பலத்தையும் பவர்-ஹிட்டிங்கையும் கொண்டு வந்தார். பொதுவாக இந்திய விக்கெட் கீப்பர்கள் மெதுவாக பாதுகாப்பு உணர்வுடன் விளையாடுவார்கள் என்று கருத்து நிலவிய காலத்தில், தோனியின் அதிரடியான ’ஹெலிகாப்டர் ஷாட்’ பலரையும் ’அட, யாருப்பா இவன்?’ என பலரையும் கேட்க வைத்தது. MS dhoni inducted in ICC hall of fame

தோனியின் சர்வதேச வாழ்க்கை ஒன்று மென்மையாக தொடங்கியதல்ல. மாறாக மாறாத வடுவாகவே இன்றும் உள்ளது. டிசம்பர் 2004 இல் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் அறிமுகமானபோது டக்-அவுட் ஆனார். அதனால் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் அடுத்த வருடம் 2005 ஏப்ரலில் விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அது அவரது முதல் சதம் மட்டுமல்ல. தன்னை நோக்கி எழுந்த விமர்சனங்களுக்கு தோனி கொடுத்த முதல் சவுக்கடி.
அதற்கு அடுத்த சில மாதங்களில் ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடிய தோனி கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மற்றொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி சேஸிங் செய்தது. அதில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய தோனி, 15 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 145 பந்துகளில் 183* ரன்கள் அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். இதுதான் இன்றுவரை ஆடவர் ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக வரலாற்றில் உள்ளது.
தோனி… பாரம்பரியத்தின் சின்னம்! MS dhoni inducted in ICC hall of fame
“அனைவராலும் போற்றப்பட்டு மதிக்கப்படும் கிரிக்கெட்டின் ஒரு பிராண்டாக அவர் விளையாடினார்” இதுதான் தோனி குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் சொல்லும் ஒற்றை வரி அடையாளம்.
அதனை மேற்சொன்ன இந்த இரண்டு சம்பவங்களின் மூலம் தோனி எப்படிப்பட்ட ஒரு சூப்பர் வீரர் என்பதை அவரது ஆரம்ப காலத்திலேயே உலகம் கண்டு கொண்டது.
இந்திய கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திர வீரராக குறுகிய காலத்திலேயே வலம் வந்த தோனியின் புத்திசாலித்தனம், அசைக்க முடியாத அமைதி மற்றும் அசாத்திய பேட்டிங் – கீப்பிங் திறமை அவரை ’இந்திய அணியின் எதிர்காலம்’ என்பதை உணர வைத்தது.
இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் கமிட்டி ஒரு தைரியமான முடிவை எடுக்க வழிவகுத்தது. ஆம், 2007ஆம் ஆண்டில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் டி20 புரட்சியின் முன்னோடி!
இந்திய அணிக்கு 2007ஆம் ஆண்டு தொடக்கம் படுமோசமாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸில் நடந்த 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் சச்சின், சேவாக், கங்குலி, டிராவிட் என ஜாம்பவான் நிறைந்த இந்திய அணி, அப்போது கத்துக்குட்டியாக இருந்த வங்கதேசத்திடம் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அது ஒட்டுமொத்த இந்திய அணியையும் பெரிய அளவில் பாதித்தது.
அதனைத் தொடர்ந்து தான் முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி உருவானது. சச்சின், டிராவிட் போன்ற ஜாம்வான்கள் இல்லாததால் இந்தியாவின் இளம்படை மீது எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்தது.
ஆனால் அந்த தொடர் தோனியின் தலைமையில் இந்திய அணியின் புதிய தலைமுறை வீரர்கள் தோன்ற வழிவகுத்தது. இந்திய அணியின் எழுச்சிக்கு ஆரம்ப புள்ளியாக அமைந்தது. அதில் இருந்த ரோஹித் சர்மா, ஆர்.பி. சிங், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ஸ்ரீசாந்த் போன்றோர் பின்னாட்களில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாக இருந்தனர். MS dhoni inducted in ICC hall of fame
அந்த தொடரில் இந்திய இளம் வீரர்களின் அச்சமற்ற அணுகுமுறை அற்புதமாக பலனளித்தது. பரம எதிரியான பாகிஸ்தானை ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியில் வீழ்த்தி, முதல் டி20 உலகக்கோப்பை சாம்பியனாக வரலாற்றில் இந்திய அணி தனது பெயரைப் பொறித்தது.
அதற்கடுத்த 2014 உலகக்கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 2016 இன் அரையிறுதிப் போட்டி என அடுத்தடுத்த உலகக்கோப்பைகளில் தோனியின் தலைமையில் இந்தியா வெற்றியை நெருங்கியது.
தோனி கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டில் புதிய சகாப்தத்தைத் தூண்டியது மட்டுமல்லாமல், அணியின் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தியது. அதைத் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நீடித்த இந்திய அணியின் வெற்றியும், கிரிக்கெட் விளையாட்டில் இதுவரை கண்டிராத மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக தோனியை கண்ணோக்கச் செய்தது. MS dhoni inducted in ICC hall of fame

டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம்! MS dhoni inducted in ICC hall of fame
தோனியின் தலைமையின் கீழ் இந்தியாவின் எழுச்சி வெள்ளை பந்து கிரிக்கெட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அது சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடையின்றி விரிவடைந்தது. டிசம்பர் 2009 இல் அவரது தலைமையின் கீழ், இந்தியா முதல் முறையாக ஐ.சி.சி ஆடவர் டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
ஒரு பேட்ஸ்மேனாக தோனி மரபுகளை மீறினார். குறிப்பாக டெஸ்ட் வடிவத்தில். அவரது வழக்கத்திற்கு மாறான மதிநுட்பமும் ஆக்ரோஷமான உள்ளுணர்வும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்றதாகத் தெரியவில்லை. ஆனாலும், மீண்டும் மீண்டும், அதைச் செயல்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.

பைசலாபாத்தில் 2006ஆம் ஆண்டு பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தோனி 153 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
அதன்பின்னர் ஒரு வருடம் கழித்து, நெருக்கடியான சூழ்நிலைகளிலும் தன்னால் பொறுமையாக விளையாடி அணியை பெற வைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி லார்ட்ஸில், 145/5 என்ற நிலையில் தவித்தது. அந்த சவாலான சூழ்நிலையில், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 159 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து வி.வி.எஸ். லட்சுமணனுடன் (86 ரன்கள்) ஒரு முக்கியான பார்ட்னர்ஷிப் அமைத்தார். லட்சுமண் ஆட்டமிழந்த பிறகும், கடினமான அந்த போட்டியை கடைசி வரை போராடி தோனி டிராவில் முடித்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இது 1986க்குப் பிறகு இங்கிலாந்தில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய டெஸ்ட் தொடராக வரலாற்றில் பதிவானது.
தோனியின் பல மறக்கமுடியாத டெஸ்ட் பேட்டிங் பங்களிப்புகளில், 2013ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் அடித்த ஒரே இரட்டை சதத்தை விட உயர்ந்தது எதுவுமில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 380 ரன்களை எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 196/4 என்ற நெருக்கடியில் இருந்தது. ஆனால் தோனி பொறுமையாகவும், பொறுப்புடனும் விளையாடி 224 ரன்கள் குவித்து அணியின் இலக்கை 572 ஆக உயர்த்தினார். இது அவரது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் ஆகும். இந்திய அணியும் அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி ஆட்டநாயகன் விருது பெற்ற இந்த போட்டி, அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகவும் இன்றளவும் நினைவு கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெறும் வரை தனது டெஸ்ட் வாழ்க்கை முழுவதும், ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ஏராளமான சோதனைகளை சந்தித்தார். எனினும் தனது நரம்பிலேயே ஊறிப் போன போராட்ட குணத்தின் மூலம் மீண்டும் மீண்டும் சண்டை செய்து இந்தியாவை டெஸ்ட் அரங்கில் உயர்த்திற்கு கொண்டுச் சென்றார்.

இந்திய பொற்கால ஒருநாள் அணியை கட்டியெழுப்பிய நாயகன்!
உலக கிரிக்கெட்டிலும் சரி, இந்திய அணியிலும் சரி, தோனியைப் போல ஒருநாள் வடிவ கிரிக்கெட்டுக்கு புதிய முகம் கொடுத்த வீரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களிலும் ஒரு பினிஷராக, கேப்டனாக மற்றும் விக்கெட் கீப்பராக தங்கள் ஆளுமையை நிரூபித்தவர்கள் அவரைத் தவிர வேறு யாருமில்லை.
குறுகிய காலத்தில் தனது முத்திரையை பதித்தவர், தனது 40வது ஒருநாள் போட்டியில், ஐசிசி ஆடவர் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்திற்கு உயர்ந்தார். நம்பர் 1 இடத்தை வேகமாக பிடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை இன்றுவரை அவர் பெயரில் மட்டுமே நிலைத்து நிற்கிறது.
தோனியின் ஒருநாள் வடிவ கிரிக்கெட் பல சாதனைகளால் நிறைந்துள்ளது. இந்த வடிவத்தில் அதிக ஸ்டம்பிங் (123), ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் (183*), மற்றும் இந்தியாவுக்காக கேப்டனாக அதிக போட்டிகள் (200) ஆகியவை அடங்கும். ஆனால் அவரது வாழ்க்கையில் மகுடம் சூடிய தருணம் 2011ஆம் ஆண்டு நடந்தது. அது 28 வருட காத்திருப்புக்குப் பிறகு இந்தியாவின் கைகளில் உலகக் கோப்பையைப் ஏந்தச் செய்தது தான்.
அதிலும் மிக முக்கியமான இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு இரண்டு பக்கமும் இருந்தது. அந்த சமயத்தில் துணிச்சலாக நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். சேசிங் செய்த இந்திய அணி 114/3 என்ற நிலையில் இருந்தபோது, கௌதம் கம்பீருடன் இணைந்து 109 ரன்கள் குவித்து ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
பின்னர் தனது ஸ்டைலில் லாங்-ஆன் திசையில் அமர்க்களமான வின்னிங் ஷாட் சிக்ஸ் மூலம் நீண்ட காத்திருப்புக்கு பிறகு 2வது முறையாக உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பொறிக்கச் செய்தார்.

அதனைத் தொடர்ந்து 2013 இல் இந்தியாவை வழிநடத்தி ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்று காட்டினார். இதன்மூலம் ஐசிசியின் மூன்று வடிவிலான உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற அரிய மரியாதைக்கு சொந்தக்காரர் ஆனார்.
“நீங்கள் அவருக்கு எதிராக விளையாடும்போதெல்லாம், அவர் ஆட்டமிழந்து வெளியேறும் வரை ஒருபோதும் ஆட்டம் முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்!” ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் புதிதாக சேர்க்கப்பட்ட எம்.எஸ். தோனி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் சூட்டிய புகழாரத்தின் ஒரு வரி இது.
2019 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் தனது கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும் கூட, தோனி (50) களத்தில் இருந்தவரை நியூசிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பமானமாக இருந்தார்.
அவர் துரவதிர்ஷ்டமாக ரன்-அவுட் ஆனது, ஒரு பில்லியன் இந்தியர்களின் இதயங்களை உடைத்த ஒரு தருணம் என்றே சொல்லலாம். அன்று அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லையே என கண்கலங்கியபடி மைதானத்தில் இருந்து வெளியேறியது தான் தோனியின் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கடைசி தருணமாக அமைந்தது.

எம்.எஸ். தோனி: ஒரு சகாப்தம்! MS dhoni inducted in ICC hall of fame
அதற்கு அடுத்த ஆண்டில் யாருமே எதிர்பாராத நேரத்தில் 2020, ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினத்தன்று மாலை 7:29 மணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக எம்.எஸ். தோனி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு ஆச்சரியமான அறிவிப்பாகவே கிரிக்கெட் உலகம் கருதியது. அதன்மூலம் அவரின் 16 ஆண்டுகால அற்புதமான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
எனினும் தோனி ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டின் கட்டமைப்பில் தன்னை வலுவாக பதித்துக் கொண்டார். தலைமுறை தலைமுறையாக நினைவில் வைத்திருக்கும் நினைவுகளையும் மைல்கற்களையும் அடுத்து வரும் தலைமுறையினருக்கு விட்டுச் சென்றுள்ளார் நூற்றுக்கு நூறு உண்மை. MS dhoni inducted in ICC hall of fame
தமிழில் – கிறிஸ்டோபர் ஜெமா