குஜராத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வென்று தொடரை முடித்த நிலையில், சிஎஸ்கே கேப்டன் தோனி தனது ஓய்வு முடிவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். dhoni about his retirement decision for ipl 2026
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 25) புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், 10வது இடத்தில் இருக்கும் சென்னை அணியும் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. இது நடப்பு சீசனில் சென்னை அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.
தொடர்ந்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன்மூலம் நடப்புத் தொடரின் கடைசிப் போட்டியை 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் முடித்துள்ளது சிஎஸ்கே.

இதனையடுத்து போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் தோனி பேசுகையில் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிக்க நேரம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இன்னைக்கு தான் நல்லா இருந்துச்சு!
அவர் பேசுகையில், “இன்னைக்கு மைதானம் நிரம்பிருக்குன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல கூட்டம் தான். இது ரொம்ப பெரிய ஸ்டேடியம்.
இந்த சீசன் எங்களுக்கு நல்லா போகல. ஆனால் தொடரை வெற்றியுடன் முடிச்சது நல்லா இருக்கு. இன்னைக்கு பவுலிங் டிபார்ட்மென்ட்லயும் பேட்டிங் டிபார்ட்மென்ட்லயும் சரியான பெர்ஃபார்மன்ஸ் தெரிஞ்சது. இந்த சீசன் முழுக்க நாங்க நல்லா கேட்ச் பண்ணல, ஆனா இந்த ஆட்டத்துலதான் எங்களோட ஃபீல்டிங், கேட்சிங் எல்லாம் நல்லா இருந்துச்சு.
பைக் ரைடு பண்ணிட்டு அப்புறம் முடிவெடுப்பேன்!
அடுத்த சீசனில் நான் விளையாடுவேனா, இல்லையானு முடிவெடுக்கு எனக்கு எனக்கு 4-5 மாசம் டைம் இருக்கு. இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை. ஒவ்வொரு வருசமும் உடலை ஃபிட்டா வச்சுக்க அதிக முயற்சி தேவை. நீங்க உங்க சிறந்த ஆட்டத்துல இருக்கணும், இது தொழில்முறை கிரிக்கெட். பெர்ஃபார்மென்ஸ பொறுத்து ஓய்வு எடுக்கனும்னா, பல பேர் 22 வயசுலேயே ரிட்டையர்டு ஆயிடுவாங்க.
உங்களுக்கு கிரிக்கெட் மீது எவ்வளவு பசி இருக்கு, எவ்வளவு ஃபிட்டா இருக்கீங்க, அணிக்கு எவ்வளவு பங்களிக்க முடியும்னு பாக்குறது தான் முக்கியம்.
அணிக்கு நான் தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், ஓய்வு குறித்து முடிவெடுக்க எனக்கு போதுமான நேரம் இருக்கு. இப்போதைக்கு நான் என் சொந்த ஊரான ராஞ்சிக்குத் திரும்பிப் போவேன். கொஞ்ச நாளா வீட்டுக்குப் போகல, அதனால கொஞ்சம் பைக் ரைடு பண்ணிட்டு அப்புறம் முடிவெடுப்பேன்.
நான் ஒய்வு ஆயிடுவேனும் சொல்லல, அதே நேரத்துல திரும்பி வரேன்னும் சொல்லல. எனக்கு நேரம் இருக்கு. யோசிச்சு அப்புறம் முடிவு செய்வேன்.
இந்த சீசன்ல இருந்த பிரச்சனைகளை ஆய்வு பண்ணி அத கிளியர் பண்ண விரும்புறோம். அடுத்த சீசனில் ருதுராஜ் திரும்பி வரும்போது, அவர் நிறைய விஷயங்களைப் பத்தி கவலைப்படத் தேவை இருக்காது என நினைக்கிறேன்” என தோனி பேசினார்.
