திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதி குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி விமர்சித்திருந்த நிலையில் கருணாநிதியின் குடும்பமே தமிழ்நாடு தான் என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. மணமக்கள் பிரவீன் குமார், அஸ்வினி திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “திமுக நடத்தும் மாநாட்டிற்கும் போராட்டத்திற்கும் குடும்பம் குடும்பமாக வாருங்கள் என்று கலைஞர் அழைப்பு விடுப்பார். திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் குடும்பம் தான் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். ஆம். கருணாநிதியின் குடும்பம் என்பதே தமிழ்நாடு தான். 50 ஆண்டுகளாக திராவிட இயக்கம் தான் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. நவீன தமிழகத்தை உருவாக்கியது கலைஞர் தான்.
பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த அச்சம் தான் பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் குறித்து பேச வைத்துள்ளது. மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதுவரை பிரதமர் அங்கு செல்லவில்லை. இந்த சூழலில் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார். இதன் மூலம் நாட்டில் மதப்பிரச்சனையை அதிகரித்து குழப்பத்தை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என அவர் நினைத்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
தக்காளி விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?