கேரளாவின் வயநாட்டில் இன்று (ஜூலை 30) அதிகாலையில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஒரு மாத காலமாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வயநாட்டில் நேற்று முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த தொடர் கனமழை காரணமாக இன்று அதிகாலை மேப்பாடு, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணியளவில் மேப்பாடு அடுத்த முண்டக்கை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த தொடர் மண்சரிவில் சுமார் 500 வீடுகள், 1,000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், இதுவரை ஒரு குழந்தை உட்பட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் பாலங்கள் உடைந்துள்ளதால், மீட்பு நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஹெலிகாப்டர் மூலமாக விரைந்த தேசிய பேரிடர் குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் இறங்கியுள்ளனர்.
நிலச்சரிவைத் தொடர்ந்து வயநாட்டில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மேலும் அவரது உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர்கள் விரைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நவம்பர் 1 முதல் படப்பிடிப்பு நிறுத்தம் : தயாரிப்பாளர் சங்கம் – நடிகர் சங்கம் மோதல்!
Paris olympics 2024: மனு பாக்கர் மீண்டும் பதக்கம் வெல்ல வாய்ப்பு… இன்றைய போட்டிகள் என்னென்ன?