அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தின் மீது இந்தியா அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி குவிப்பு வரியை (anti-dumping duty) விதித்துள்ளது. ரப்பர் மற்றும் டயர்கள் தயாரிப்பில் இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான ‘வர்த்தகத் தீர்வுக்கான தலைமை இயக்குநரகம்’ (DGTR) அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வர்த்தகத் தீர்வுக்கான தலைமை இயக்குநரகம் அறிவிப்பு:
இந்த ரசாயனத்தின் ஒரு டன்னுக்கு 75 டாலர் முதல் 1,748 டாலர் வரை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் விதிக்கப்படும் இறக்குமதி குவிப்பு வரி ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று வர்த்தகத் தீர்வுக்கான தலைமை இயக்குநரகம் தெரிவித்தது. ‘சல்ஃபனமைட்ஸ் ஆக்சிலரேட்டர்ஸ்’ (Sulfenamides Accelerators) எனப்படும் ரசாயனப் பொருட்கள், அவற்றின் இயல்பான மதிப்பை விடக் குறைந்த விலையில் இந்தியச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டுத் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் ‘டம்பிங்’ (குறைந்த விலையில் பெருமளவில் குவித்தல்) நிகழ்ந்தது. இதைக் கருத்தில் கொண்டே, மேற்கூறிய மூன்று பிராந்தியங்களிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இப்பொருட்களுக்கு வரி விதிக்கப்படுகிறது.
சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா:
சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத் தகடுகளுக்கான டம்பிங்-எதிர்ப்பு வரியையும் இந்தியா அதிகரித்துள்ளது. இந்த வரி இந்த ஆண்டு டிசம்பர் 15 வரை அமலில் இருக்கும் என்று வருவாய்த் துறை தனி அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. மற்றொரு அறிவிப்பில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘பாலியத்திலீன் டெரெப்தாலேட் ரெசின்’ (polyethylene terephthalate resin) மீது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு டன்னுக்கு 200.66 அமெரிக்க டாலர் டம்பிங்-எதிர்ப்பு வரியை இந்தியா விதித்துள்ளதாகவும் வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.
