இந்தியாவும் ஸ்லோவாக்கியாவும் (Slovakia) தங்கள் உறவை “விரிவான கூட்டாண்மை” (comprehensive partnership) நிலைக்கு உயர்த்தவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) மற்றும் ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை கணிசமாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாகச் செயல்படுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
ஐரோப்பாவிற்கான தனது ஒரு வார கால பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பிராட்டிஸ்லாவாவில் உள்ளார். ஒரு இந்தியப் பிரதமர் ஸ்லோவாக்கியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: “எங்கள் உறவை விரிவான கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம். இது எங்கள் பகிரப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் எதிர்காலத்தை அடையாளப்படுத்துகிறது.” என்றார். இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஸ்லோவாக்கியா அளித்த ஆதரவிற்காக பிரதமர் மோடி ஃபிகோவிற்கு நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி மேலும் கூறுகையில் “இரு நாடுகளின் தொழில்துறைகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதிலிருந்து அதிகபட்ச பலனைப் பெறும் வகையில், இதை விரைவில் செயல்படுத்த நாங்கள் பணியாற்றுவோம். இந்தியா மற்றும் ஸ்லோவாக்கியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு தரப்பினருக்கும் இடையே ஆழமடைந்து வரும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்புக்கு ஒரு சான்றாக உள்ளது” என்று பிரதமர் கூறினார். இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விருப்பக் கடிதம் (Letter of Intent) இறுதி செய்யப்பட்டது.
இந்தியா-ஸ்லோவாக்கியா வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின்படி, ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோவின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 அன்று ஸ்லோவாக் குடியரசிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரிவுகளில் விரிவுபடுத்த வேண்டிய அவசரத் தேவையை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இச்சூழலில், சீர்திருத்தப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஸ்லோவாக்கியா அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவை இந்தியா பாராட்டியது.
