2014 முதல் சுயத்தை இழந்தது உச்சநீதிமன்றம்: உடைத்துப் பேசிய முன்னாள் நீதிபதி

Published On:

| By Selvam

2014-ஆம் ஆண்டிற்கு பிறகு உச்சநீதிமன்றமானது தன் சுயத்தை இழந்துள்ளது. குறிப்பாக மத்திய அரசுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் தயங்குகிறது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த, அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற தலைப்பில் நேற்று (ஜனவரி 7) நடந்த தேசிய மாநாட்டில் முன்னாள் நீதிபதி கோபால கவுடா கலந்து கொண்டார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “2014-ம் ஆண்டு காலகட்டத்தில் உச்சநீதிமன்றம் ஆளும் கட்சிக்கு எதிரான வழக்குகளில் தயக்கம் காட்டியதில்லை. குறிப்பாக ’சிபிஐ கூண்டு பறவையாக செயல்படுகிறது’ என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது.

ஊழலுக்கு எதிரான சிலுவைப்போராக நீதித்துறை செயல்பட்டது. ஆனால் 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு உச்சநீதிமன்றமானது தன் சுயத்தை இழந்துள்ளது. குறிப்பாக ரஃபேல், ஆதார் போன்ற வழக்குகளின் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

ADVERTISEMENT

அரசு தொடர்பான வழக்குகளை கையிலெடுப்பதற்கு நீதித்துறை தயங்குகிறது. அயோத்தி வழக்கு தீர்ப்பானது இந்தியா போன்ற பன்முக மதங்கள் வாழும் குடியரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சமூகத்தில் பிற்போக்கு சக்திகளின் எழுச்சி மற்றும் ஜனநாயக அரசை இந்து பாசிச அரசாக மாற்றும் முயற்சிகள் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்கள் அழிந்து வருகின்றன.

இங்கு தேர்தல் என்பது வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கான சம்பிரதாய சடங்குகளாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள 20 சதவிகித மக்கள் தொகை கொண்ட தலித் மற்றும் ஆதிவாசி பழங்குடியினர் சமுதாய ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர்கள் இன்று பயத்தில் உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் மதச்சார்பற்ற குடியரசின் அடித்தளத்தை CAA மற்றும் NRC மாற்றி அமைத்துவிட்டது. பணமதிப்பழிப்பு தீர்ப்பில் அரசியலைமைப்பு ஜனநாயத்தை நிலைநாட்டிய நீதிபதி பி.வி நாகரத்தினாவை பாராட்டுகிறேன். நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்துள்ளது.” என்று பேசினார்.

செல்வம்

புதுக்கோட்டை சம்பவம்: போராட்டத்தை அறிவித்த விசிக

சென்னையில் அதிகாலையில் களைகட்டிய மாரத்தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share