பால்கனியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி விழுந்து சிறுவன் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Flower pot falls from balcony
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹவுசிங் சொசைட்டி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புக்கு கீழே கடந்த 11ஆம் தேதி மாலை வேளையில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறுவர்கள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாய் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அந்த கட்டிடத்தின் பால்கனியில் இருந்து ஒரு பூந்தொட்டி வேகமாக ஒரு சிறுவன் தலையில் விழுந்தது.
பூந்தொட்டி விழுந்த அடுத்த நொடி வலியில் துடிதுடித்து அந்த சிறுவனும் சுருண்டு கீழே விழுந்தான்.
இதைக் கண்ட மற்ற சிறுவர்கள் பயந்து அலறியடித்து ஓட, அங்கிருந்த பெரியவர்கள் ஓடி வந்து சிறுவனை தூக்கினர்.
ஆனால் சுயநினைவின்றி கிடந்த சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதில், அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்நிலையில் சிறுவன் மீது பூந்தொட்டி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது.
இந்தசூழலில் “உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்கள் பால்கனியில் பூந்தொட்டிகளை வைக்கும்போது விழிப்புடனும் கவனமாகவும் இருக்க வேண்டும். இது விதியால் ஏற்பட்ட மரணம் அல்ல. யாரோ ஒருவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விளைவு. ஒருவரது உயிரை பணயம் வைத்து உங்களது பால்கனிகளை அலங்கரிக்காதீர்கள்” என்று நெட்டிசன்கள் உயிரிழந்த சிறுவனுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Flower pot falls from balcony