அரசு ஊழியர்களின் சொத்துக்கள்: வெளியான அதிரடி உத்தரவு! 

Published On:

| By Kavi

Property of government employees

அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை பொதுநலன் இல்லாமல் வெளியிட முடியாது என்று மாநில தகவல் ஆணையம் கூறியுள்ளது. Property of government employees

கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றி வரும் காளிப்பிரியன் என்பவரின் சொத்து, கடன், வருமான வரி உள்ளிட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திம்மபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் கேட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார். 

சம்பந்தப்பட்ட அதிகாரி ஊழல் செய்திருப்பதாக கருதினால் உரிய அமைப்புகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தினார். 

இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சி.வி கார்த்திகேயன் விசாரித்தார். 

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, அரசு ஊழியர்களின் அரசு பணி சார்ந்த விவரங்களையும் சொத்து கடன் விவரங்களையும் வழங்க எந்த தடையும் இல்லை. எனவே இதுபோன்ற தகவல்களை வழங்க மறுப்பது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.

இதை விசாரித்த நீதிபதி, “அரசு ஊழியர்களின் பணியை பாதிக்கும் வகையிலான தகவல்களை பொதுவெளியில் வெளியிட முடியாது. ஆனால் சொத்துக்கள் மற்றும் கடன் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என்று மறுக்க முடியாது. 

இந்த தகவல்களை வழங்க முடியாது என மாநில தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே மனுதாரர் கடந்த ஆண்டு அளித்த மனுவை மாநில தகவல் ஆணையம் மீண்டும் சட்டப்படி பரிசீலனை செய்து இரண்டு மாதங்களில் தீர்வு காண வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தார்.

எனினும் மனுதாரரின் மனுவை மீண்டும் நேற்று விசாரித்த மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் பொதுநலன் இல்லாமல் அரசு ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். Property of government employees

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share