ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கொடூரம்: மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!

Published On:

| By Kavi

 Tiruppur nurse murder

திருப்பூரில் செவிலியர் ஒருவர் அவரது கணவரே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Tiruppur nurse murder

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே பூம்புகார் பகுதியில்  உள்ள ஒரு காலியிடத்தில் பெண் ஒருவர் கொடூரமாக  கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் இன்று (மே 1) காலை தகவல் தெரிவித்தனர். 

இந்தநிலையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அந்த பெண்ணின் உடலில் தலை, கால் ஆகியவை கல்லால் அடித்து நசுக்கப்பட்டிருந்தது.  அவர் இளஞ்சிவப்பு நிறத்தில் செவிலியர் ஆடை அணிந்திருந்திருந்தார். 

இதை வைத்து விசாரித்ததில் அந்த பெண் பல்லடம் சாலையில் உள்ள க்ரிஷ் பல் மருத்துவமனையில் பணியாற்றியது தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். 

அதில் அந்த செவிலியர் தோளில், ஒரு ஆண் கைபோட்டு நடந்து செல்வது பதிவாகியிருந்தது. 

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த அந்த செவிலியர் மதுரையைச் சேர்ந்த சித்ரா என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த இவர், 11 ஆண்டுகளுக்கு முன்னதாக ராஜேஷ்கண்ணன் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர்கள்.    

இவர்களுக்கு தேவசேனா (9)  என்ற பெண் குழந்தையும், ஆம்ரபஸ்வந்த் (1) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 45 நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன்  ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருப்பூர் வந்து தென்னம்பாளையம் பகுதியில் தனது தாயார் சீதாலட்சுமி வசித்து வரும் வீட்டுக்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.

25 நாளுக்கு முன்னர்தான் அருகில் உள்ள க்ரிஷ் மருத்துவமனையில் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.  

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 30) இரவு 9  மணியளவில் ராஜேஷ்கண்ணன், சித்ரா மற்றும் இரு குழந்தைகளை தென்னம்பாளையத்தில் உள்ள வீட்டிலிருந்து சொந்த ஊருக்கு வற்புறுத்தி  அழைத்துச் சென்றதாக இறந்தவரின் தாயார் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதனால் சித்ராவின் கணவரே தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அவரது எண்ணுக்கு போலீசார் தொடர்புகொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததும், அவர் தலைமறைவாகியிருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் அவரை கைது செய்ய தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, மதுரை அலங்காநல்லூர் பகுதியில் ராஜேஷ் கண்ணன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவியை சமாதானம் செய்து அருகில் உள்ள கடைக்கு போகலாம் என்று கூறி அழைத்துச் சென்று கொலை செய்திருப்பதும், திருமணம் ஆன முதலே சித்ராவை சந்தேகப்பட்டு கொடுமை செய்து வந்ததும்,  நேற்றைய தினம் சித்ராவை கொலை செய்துவிட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராஜேஷ்கண்ணன் இரவோடு இரவாக  மதுரை சென்றதும் தெரியவந்திருக்கிறது. 

தற்போது குழந்தைகள் சித்ராவின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.  ராஜேஷ் கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். Tiruppur nurse murder

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share