எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் நடிகர் சரவணன் தான் காரணம் என அவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ காவல் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 4) புகாரளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சரவணன் 1991ம் ஆண்டு வைதேகி வந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து கதாநாயகனாக வலம் வந்த சரவணனுக்கு, பருத்தி வீரன் படத்தின் சித்தப்பு கதாபாத்திரம் குறிப்பிடத்தக்க வெற்றியை தந்தது. இதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தவர் கடைசியாக வெளியான ’தலைவன் தலைவி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.
சரவணன் கடந்த 2003ம் ஆண்டு சூர்யா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 2019ல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் மாங்காடு அருகே உள்ள மவுலிவாக்க அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.
நடிகர் சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன் சேலம் மாவட்டம் வட்டக்காடு என்ற பகுதியில் படப்பிடிப்பு ஸ்டூடியோ ஒன்றை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் முதல் மனைவி சூர்ய ஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் ”கடந்த 1996 முதல் 2003 வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து பின் 2003ல் திருமணம் செய்து கொண்டோம். நான் செய்த கஸ்டம்ஸ் ஏஜென்ஸ் ஹவுஸ் தொழிலில் வந்த வருமானத்தில் சரவணன் தன்னுடன் வாழ்ந்து வந்தார்.
இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்துள்ளார். இதனால் தொடர்ந்து சண்டை வருகிறது. மேலும் ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்து கொள்ளக்கூடாது இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டிற்கு வந்த போது அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். ஆனால் அந்த பெண் தன் நன்றியை மறந்து விட்டாள்.
எனக்கு பராமரிப்பு தொகையாக ரூ.40 லட்சம் தருவதாக கூறி சரவணன் ஏமாற்றி விட்டார். இப்போது நான் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு சரவணனும் அவரது இரண்டாவது மனைவியும் தான் காரணம்” என குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.