சிலைகடத்தல் வழக்கில் ஜாமீன் பெற்ற முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று (மே 5) உத்தரவிட்டுள்ளது. dont interview on cbi case.. sc to pon manickavel
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இவர் தீனதயாளன் என்ற முக்கிய சிலை கடத்தல் குற்றவாளியை வழக்கில் இருந்து தப்பவைக்க உதவியதாக அதே பிரிவில் டிஎஸ்பியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காதா்பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
எனினும் பொன்மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து காதர்பாட்ஷா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் மேல்முறையீடு செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, பொன் மாணிக்க வேலுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனையடுத்து பொன் மாணிக்கவேலுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காதர்பாட்ஷா தரப்பிலும், சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ஊடகங்களில் பொன் மாணிக்கவேல் பேட்டி அளிப்பதால் விசாரணை தடைபடுவதாக சிபிஐ தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பொன் மாணிக்கவேல் சிபிஐ வழக்கிற்கு எதிராக, வழக்கை திசைதிருப்பும் வகையில் ஊடகங்களில் பேசி வருகிறார். எனவே அவர் பேட்டியளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவும் வாய்ப்பிருப்பதால், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
காதர் பாட்ஷா தரப்பில், ’பொன் மாணிக்கவேல் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பொன் மாணிக்கவேல் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். சிலை கடத்தல், சிபிஐ விசாரணை தொடர்பாக பொன் மாணிக்கவேல் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் எந்தவித பேட்டியும் அளிக்கக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலை தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.