சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்பதெல்லாம் முடிந்துபோன கதை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (பிப்ரவரி 4) எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “சசிகலா அதிமுகவிற்கு வந்தால் மீண்டும் ஏற்பீர்களா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,“அது எல்லாம் ஏற்கனவே முடிந்துபோய்விட்டது. நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். திருப்பித் திருப்பி கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி கேட்காதீர்கள். அதெல்லாம் ஏற்கனவே முடிந்துபோன கதை. அதைத் திருப்பிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இனி இது மாதிரியான கேள்விகளைக் கேட்காதீர்கள்” என்றார்.
முன்னதாக, நேற்று அண்ணா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற சசிகலா, “நான் ஏற்ற உறுதிமொழியில், ‘எனது தலைமையில் துரோகிகளுக்கும் எதிரிகளுக்கும் நாங்கள் பாடம் கற்பிப்போம். என் தலைமையில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது உண்மைதான். இதில் யார் துரோகி… யார் எதிரி என்பதை மக்களின் கருத்துக்கே விட்டுவிடுகிறேன். மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். இதை விவரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் தேர்தல் களத்தில் எங்களுடைய எம்ஜிஆர் – ஜெயலலிதா தொண்டர்கள் இருப்பார்கள். அது எப்படி, என்ன என்பதை விரைவில் அனைவரும் தெரிந்துகொள்வார்கள்” என்றார்.
