குபேரா : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

dhanush kuberaa movie review june 20

ஹீரோயிசம் காட்டுவது நாகார்ஜுனாவா, தனுஷா?

’ஹீரோ ஸ்கிரீன்ல வந்தாலே தன்னால தீப்பிடிக்கும்’ என்று கதை சொல்கிற தெலுங்கு மசாலா பட இயக்குனர்களில் இருந்து நிறையவே வேறுபட்டவர் சேகர் கம்முலா. இவரது திரைப்படங்களில் ஹீரோயிசம் ‘அதீதமாக’த் தென்படாது. அதேநேரத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை நகர்த்துவதில் பெயர் பெற்றவர். இப்படியொரு இயக்குனரின் கையில் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த இரண்டு நாயகர்கள் கிடைத்தால் என்னவாகும்? அவர்களில் ஒருவர் சீனியராகவும் இன்னொருவர் ஜுனியராகவும் இருந்தால் கதை சொல்லலில் யாருக்கு முக்கியத்துவம் இருக்கும்? dhanush kuberaa movie review june 20

அப்படியொரு படமானது முழுக்க இயக்குனரின் பாணியில் அமையுமா அல்லது வழக்கமான ‘கமர்ஷியல் பட பேக்கேஜ்’ ஆக இருக்குமா? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா உடன் ராஷ்மிகா மந்தனா, ஜிம் சரஃப், தலீப் தஹில், பாக்யராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘குபேரா’ தரும் திரையனுபவம் எத்தகையது?

எளியவர்களின் வலி!

திருப்பதி மலையடிவாரத்தில் பிச்சைக்காரராக இருக்கிறார் தேவா (தனுஷ்). அவரை அழைத்துச் செல்கிறது ஒரு கும்பல். அவரை மட்டுமல்லாமல், இன்னும் மூன்று பேரை வெவ்வேறு இடங்களில் இருந்து மும்பைக்குக் கூட்டிச் செல்கிறது. அவர்களது தோற்றத்தை மாற்றி, மெல்ல அவர்களைப் பணக்காரர்களாகச் சிலர் முன்பு நிறுத்துவதே அவர்களது திட்டம்.

இதன் பின்னணியில் இருக்கும் நபர் தீபக் (நாகார்ஜுனா). இவர் ஒரு முன்னாள் சிபிஐ அதிகாரி. நேர்மையாகச் செயல்பட்டதற்காகச் சிறைத் தண்டனை பெற்றவர்.

அவரைச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருகிறார் தொழிலதிபர் நீரஜ் (ஜிம் சரஃப்). பதிலுக்கு, ’தனது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுகிற வேலையை வெளியே தெரியாமல் செய்ய வேண்டும். என்னை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது’ என்று சில நிபந்தனைகளை முன்வைக்கிறார். அதனை ஏற்கிறார் தீபக்.

அதற்காகத்தான், தேவா உள்ளிட்ட நால்வரையும் ‘பினாமி’களாக மாற்றி, அவர்களது பெயரில் போலி நிறுவனமொன்றை தொடங்கி, அவற்றின் வழியே வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ஏமாற்றி, கருப்பு பணத்தை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பரிமாற்றம் செய்யத் திட்டமிடுகிறார் தீபக்.

அந்த விஷயம் நிகழும்போது பாதியிலேயே ‘பணால்’ ஆகிறது. தேவா உடன் வந்த இரண்டு பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த உண்மை தெரிய வந்தபிறகு தேவாவும் குஷ்புவும் என்னவானார்கள் என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

இந்த விஷயத்தை மையமாக வைத்துக்கொண்டு, சுற்றிச் சுற்றி கண்ணாமூச்சி ஆடும்விதமாகத் திரைக்கதை அமைப்பதில் தவறிழைத்திருக்கிறது படக்குழு. அதில் சில ‘கிம்மிக்ஸ்’ சேர்த்திருந்தால் சுவையான திரையனுபவம் கிடைக்குமாறு செய்திருக்க முடியும்.

அதே நேரத்தில், எளியவர்களின் வலி ஒரு சமூகத்தில் வெல்லவே முடியாத வலிமையுடன் அதிகார பீடத்தில் வீற்றிருக்கிற நபர்களுக்குப் பிடிபடுகிறதா என்று சொல்வதே இக்கதையின் சிறப்பு.

அசத்தும் தனுஷ்!

திரையில் படம் தொடங்கிச் சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகே தனுஷ் தலைகாட்டுகிறார். படம் முழுக்க தேவா எனும் பாத்திரமாக, அசத்தல் நடிப்பைத் தந்திருக்கிறார். பல்வேறு காலகட்டங்களில் படம்பிடிக்கப்பட்டபோதும், அந்த வித்தியாசம் நம் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதில் தீபக்காக நாகார்ஜுனா, அவரது மனைவியாக சுனைனா நடித்துள்ளனர். சமீரா எனும் பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களது நடிப்பு கதைக்குத் தேவையான வகையில் உள்ளது.

ராஷ்மிகா இதில் யாருக்கு ஜோடி என்ற கேள்வி திரைக்கதையில் இருப்பது சிறப்பானதொரு விஷயம்.

அதே நேரத்தில், அவர் சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் விவரமாகத் திரையில் சொல்லப்படவில்லை. நாகார்ஜுனாவின் தீபக் பாத்திரம் நல்லதா, கெட்டதா என்பதைச் சொல்லவும் இயக்குனர் தடுமாறியிருக்கிறார்.

‘இது என்னாச்சு’, ‘அது என்னாச்சு’ என்று ரசிகர்கள் கேட்கும்விதமாகச் சில விஷயங்களை ‘அம்போ’வென்று திரைக்கதையில் நிறுத்தி வைத்திருக்கிறார். அனைத்தையும் தாண்டி, இப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஓடுகிறது. அதனைச் சரி செய்யும் வகையில் கொஞ்சம் திரைக்கதையைச் செறிவானதாக ஆக்கியிருக்கலாம்.

கூடவே, வில்லனின் ஆட்கள் மற்றும் இதர பாத்திரங்களூக்கான முக்கியத்துவத்தையும் அதிகப்படுத்தியிருக்கலாம். சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தை இதற்கான உதாரணமாகக் கொண்டிருக்கலாம்.

சைதன்யா பிங்கலி உடன் இணைந்து இதற்குத் திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார் சேகர் கம்முலா. அகோரம் பன்னீர்செல்வத்தின் தமிழ் வசனங்கள் ஆங்காங்கே நம்மை ஈர்க்கின்றன. ‘உன் சாவை நீ சாவு, என் சாவை நான் சாவுறேன்’, ‘வாழ்றதுக்காகத்தான் பொழைக்கணும்’ என்பது போன்ற வசனங்கள் முதலில் அயர்ச்சியூட்டினாலும், அடுத்தடுத்து ஒலிக்கையில் கைத்தட்டலை பெறுகின்றன.

இந்த படத்தில் வில்லனாக வரும் ஜிம் சரஃப் அசத்தியிருக்கிறார். இன்னும் தலீப் தஹில், பாக்யராஜ் என்று சில சீனியர்கள் திரையில் வந்து போயிருக்கின்றனர். குறிப்பாக, பாக்யராஜை அவரது குரல் கொண்டே அடையாளம் காண முடிகிறது. தெலுங்கு பதிப்பில் அப்பாத்திரத்திற்கு அவரே ‘டப்பிங்’ பேசியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.

கேலு, திவ்யா, குஷ்புவாக நடித்தவர்கள், அடியாட்களாக வருபவர்கள் உட்படச் சிலருக்குச் சரியான முக்கியத்துவம் திரைக்கதையில் தரப்படவில்லை. அவை உறுத்தலாகத் தென்படுகின்றன.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியன படத்தை ‘கலர்ஃபுல்’லாக காட்ட உதவியிருக்கின்றன.

கார்த்திகா ஸ்ரீனிவாஸின் படத்தொகுப்பு இன்னும் கூர்மையாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

இது போக ஆடை வடிவமைப்பு, ஒலி வடிவமைப்பு, டிஐ என்று பல நுட்பங்கள் கதை சொல்லலுக்கு உதவியிருக்கின்றன.

தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை முன்பாதியில் இருக்கும் மந்தத்தன்மையை நன்றாகவே மறைத்திருக்கிறது. பின்பாதியில் அதனைச் சரிக்கட்டத் திணறியிருக்கிறது. ஆனாலும், ‘கத கத’, ‘போய்வா நண்பா’ பாடல்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன.

நாகார்ஜுனா, தனுஷ் ஆகிய இரண்டு நடிகர்களைக் கொண்டு திரையில் ‘ஆடு புலி ஆட்டம்’ ஆட முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், அது சரிவர அமையப் பெறவில்லை என்பதே உண்மை.

கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி வலிந்து திணிக்கப்பட்டாற் போல உள்ளது. ஜிம் சரஃப் பாத்திரம் பற்றி இறுதிக்காட்சியில் தனுஷ் பேசுகிற வசனங்களுக்கும் அதனைத் தொடர்ந்தாற் போல இடம்பெற்ற சண்டைக்காட்சிக்கும் பெரிதாகத் தொடர்பு ஏதும் இல்லை.

ஆக்‌ஷன் காட்சிகளில் நாகார்ஜுனாவையும், வசனங்கள் மற்றும் நடிப்பு வழியே தனுஷையும் திரையில் காட்டி ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் சேகர் கம்முலா. ஆனால், இரண்டுமே போதுமான அளவு படத்தில் எடுபடவில்லை என்பதுதான் குறை.

அதேநேரத்தில், சமீபகாலமாக வந்த ‘பான் இந்தியா’ மற்றும் பிரமாண்ட படங்களைக் காட்டிலும் வேறுபட்டதொரு திரையனுபவத்தைத் தருகிறது ‘குபேரா’. இதிலிருக்கிற லாஜிக் மீறல்கள், அடிப்படைக் குறைகள் உள்ளிட்டவற்றைப் புறந்தள்ளிவிட்டால், ஓரளவுக்கு வேறுபட்ட கமர்ஷியல் படம் பார்த்த எண்ணம் மனதில் உருவாகும். அது போதும் என்பவர்கள் மட்டுமே ‘குபேரா’வை பார்த்துச் சிலாகிக்க முடியும்..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share