முன்னாள் எம்பி மரணத்தில் திருப்பம்: காரில் வைத்து உறவினரே கொன்றது அம்பலம்!

Published On:

| By Kalai

முன்னாள் எம்.பி மஸ்தான் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகி இருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யும், திமுக சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவருமான மஸ்தான், கடந்த 22-ம் தேதி திருவல்லிக்கேணியில் இருந்து உறவினர் இம்ரான் என்பவருடன் காரில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கூடுவாஞ்சேரி அருகே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவரது மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் பத்திரிகை கொடுத்து வந்தவர் திடீரென உயிரிழந்தது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

death of former MP masthan

ஆனால் மஸ்தானின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததும், அவரது இறப்பு தொடர்பாக உறவினர் இம்ரான் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர். அதில் மஸ்தான் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மஸ்தான் நிச்சயமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

மஸ்தானுடன் பயணித்த இம்ரான் அவருடைய சகோதரரின் மருமகன் ஆவார். இம்ரானுக்கும், மஸ்தானுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.

இந்தநிலையில் அவர் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

அதில் இம்ரான், சுல்தான் என்ற 5 பேர் சேர்ந்து மஸ்தானை கொன்றது தெரிய வந்திருக்கிறது.

காரிலேயே வைத்து 5 பேரும் மஸ்தானின் வாயையும், மூக்கையும் பொத்தி கொன்றிருக்கின்றனர். 5 பேரையும் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளது.

பணம் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் 1995 ல் இருந்து 2001 வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் மஸ்தான் தஸ்தகீர்(66).

மஸ்தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இருந்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத்தலைவர் மற்றும்  திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளராக இருந்து வந்தார் மஸ்தான்.

கலை.ரா

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: வைரலாகும் புகைப்படங்கள்!

அதிமுகவில் நீடிக்கும் இரட்டை தலைமை: தேர்தல் ஆணைய கடிதத்தால் குழப்பம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share