சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும், அதிவேகத்திலும் செல்லும் நபர்களைப் பிடிக்க சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் குற்ற நபர்களைப் பிடிக்க தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் இரவு சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில்,
சென்னை பெருநகரில் குற்றங்களைக் குறைக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யவும், பழைய குற்றவாளிகளைக் கண்காணித்து, குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பல்வேறு குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் அபாயகரமான முறையிலும்,
அதிவேகத்திலும் செல்லும் நபர்களைப் பிடிக்க சிறப்பு வாகனத் தணிக்கைகள் மற்றும் குற்ற நபர்களை பிடிக்க தங்கும் விடுதிகளான லாட்ஜ், மேன்ஷன்களில் சோதனைகள் மேற்கொள்ளவும், உத்தரவிட்டதன்பேரில்,
காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் இரவு சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பேரில், 27.12.2022 இரவு சென்னை பெருநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில்,
10,572 வாகனங்கள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் விசாரணை மற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 48 வாகனங்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியது,
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் முறையான ஆவணங்கள் இல்லாத 231 வாகனங்கள் என மொத்தம் 279 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 279 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், Face Recognition Software என்ற முக அடையாளத்தைக் கொண்டு குற்ற நபர்கள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 4,846 நபர்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேபோல, சென்னையிலுள்ள 599 லாட்ஜுகள், மேன்ஷன்கள் என தங்கும் விடுதிகளில் காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில், பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதை பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு,
சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்,
உரிய அடையாளச் சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சென்னை பெருநகர காவல்துறையின் இந்தச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்.
குற்ற நபர்கள் அல்லது சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க, சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-ராஜ்
புத்தாண்டு கொண்டாட்டம்: காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள்!
2022 இறுதியில் அதிரடி காட்டும் நாயகிகள்