பல்வேறு ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவிடம் தங்கள் கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 15 அன்று முடிவடைந்தது. இந்த முக்கியமான கட்டம் நிறைவடைந்த நிலையில், அனைவரின் கவனமும் இப்போது அகவிலைப்படி (Dearness Allowance) அறிவிப்பின் மீது திரும்பியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டம் நிறைவு:
8-வது ஊதியக் குழு தனது அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடமிருந்து ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதிய அமைப்பு குறித்த பரிந்துரைகளை கோரியிருந்தது. அகில இந்திய NPS ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சித் சிங் படேலின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஆலோசனையின் முக்கிய கட்டத்தை இக்குழு நிறைவு செய்துள்ளது. இனி, ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை இக்குழு விரிவாக ஆய்வு செய்து தனது முடிவை அறிவிக்கும்.
அகவிலைப்படி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 2026 ஏப்ரல் மாதம் இந்தக் குறியீடு 0.8 புள்ளிகள் அதிகரித்து 149.9-ஐ எட்டியது. அகவிலைப்படியைத் தீர்மானிக்க அரசுக்குக் குறைந்தது இரண்டு மாதங்களுக்கான தரவுகள் தேவைப்படுகின்றன. ஜூலை மாதத் தரவை மட்டும் வைத்துக்கொண்டு ஜூலை-டிசம்பர் காலத்திற்கான அகவிலைப்படியைத் தீர்மானிக்க முடியாது. எனவே, அரசு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கான சராசரி தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்.
ஆணையத்திடம் உள்ள கால அவகாசம்:
8வது ஊதியக் குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதன் மூலம் ஊழியர்களின் ஊதியம் மற்றும் படிகளில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய மாற்றங்களுக்கான countdown தொடங்கிவிட்டது என்பது தெளிவாகிறது.
