தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்தார். எட்டு நாள் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை முதல்வர் ஸ்டாலின், தமிழகம் திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,” மனநிறைவோடு திரும்பி உள்ளேன். மிகவும் திருப்திகரமான பயணமாக அமைந்தது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து பயணங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும் 17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மொத்தமாக 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணங்கள் மூலமாக அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இது ஒரு வெற்றிகரமான பயணமாக அமைந்தது என்றார்.
மேலும் பெரியார் படத்தை ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தது பெருமை என்றவர், முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சர் ஆக மட்டுமல்லாமல் திராவிட இயக்க தலைவராக, பெரியாரின் பேரனாக, தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் மறக்க முடியாததாக உள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேசமயம் சிலரால் இதை பொறுக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு கொண்டிருக்கும் மனித வளம் உட்கட்டமைப்பு, சலுகைகள், வெளிப்படையான அரசு நிர்வாகம்.. இப்படியான தகவல்களை முதலமைச்சர் ஆக நானே எடுத்துச் செல்கிறேன். இது போன்ற வெளிநாட்டு பயணங்கள் மேலும் தொடரும் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், சுயமரியாதைக் கொள்கையில் முதலீடு செய்து வருகிறேன். மௌனப் புரட்சி செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசு எவ்வளவு புறக்கணித்தாலும் அதை மீறி முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்றார்.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செங்கோட்டையனின் பதவி பறிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ஆக்கபூர்வமாக பேசிக் கொண்டிருக்கும்போது அக்கப்போரான விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம் என்று தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.