ஆபாச வீடியோ சர்ச்சை… பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம்!

Published On:

| By christopher

பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா ம.ஜ.த.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சி இன்று (ஏப்ரல் 30) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதில் மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின்போது 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

இதற்கிடையே தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ரேவண்ணா மீது எழுந்த புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையிலான சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சொந்த கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்குள்ளாகவே ரேவண்ணா மீது கடும் அதிருப்தி எழுந்தது. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி எழுப்பினர்.

இதுதொடர்பாக நமது மின்னம்பலம்.காம் தளத்திலும் ரேவண்ணா மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என ‘தேவ கவுடாவின் பேரன் நடத்திய ஆபாச லீலைகள்… லீக் ஆன வீடியோக்கள்! காத்திருந்து கதை முடித்த பாஜக, குமாரசாமி’  என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் மஜத கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை கூடியது. அதில் பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேவண்ணாவிடம் பாலியல் புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அதன் பின்னர் அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் ம.ஜ.த கட்சி  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சிபிசிஐடி சம்மன்!

அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோ…தெலுங்கானா முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய டெல்லி காவல்துறை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share