Ban to enter Omni Bus Station
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்த பயணிகள் எப்படி ஊருக்கு செல்வது என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி இல்லை என்று கூறி கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.
அரசின் உத்தரவும்; மறுக்கும் ஆம்னி உரிமையாளர்கள்!
இதனையடுத்து சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஜனவரி 24 இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில் இ.சி.ஆர். மார்க்கமாக, சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக, சித்தூர், ரெட் ஹில்ஸ் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அரசின் உத்தரவை அடுத்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோயம்பேட்டில் இருந்து 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்துகளை பயணிகளின் நிலை, கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்த இடவசதியின்மை உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இன்று கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவது சாத்தியமில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும் உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் கிரிமினல் சட்டத்தின் படி நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தடுப்புகள் அமைப்பு: மக்கள் அவதி!
மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆம்னி பேருந்து பயணிகள் கிளாம்பாக்கம் செல்வதற்கு வசதியாக மாநகர பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் தைப்பூச தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்த பயணிகள் ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து கிளம்புகின்றன என்பதில் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
குறிப்பாக ஆம்னி பேருந்தில் செல்ல கோயம்பேடு வந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் இன்னும் அரசு மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே தெளிவாக முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், இன்று சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாக்ஸ் ஆபிஸை ஆளும் அயலான் : இத்தனை கோடி ரூபாய் வசூலா?
ஆளுநர் மாளிகை முற்றுகை: காங்கிரஸுடன் கைகோர்க்கும் கூட்டணி கட்சிகள்!
AK63: அஜித்துக்கு வில்லன் இவரா?… வெளியான சூப்பர் அப்டேட்!
Ban to enter Omni Bus Station
Comments are closed.