மறைந்த நடிகர் முரளியின் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன இதயம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் நடிகை ஹீரா. actress heera accused ajith goes viral
ராணுவ குடும்பத்தில் பிறந்த ஹீரா, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லுரியில் உளவியல் பட்டம் படித்தவர். மாடலிங்கிலும் ஈடுபாடு கொண்ட அவரை, தான் இயக்கிய ’இதயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் கதிர்.
படமும் வெளியாகி வரவேற்பை பெறவே, அதன்பின்னர் ஏராளமான தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் ஆகிய படங்களில் நடித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் ஒரு கட்டத்தில் அஜித்தின் குடும்பத்தினர் ஏற்காத நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர், தற்போது வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் Heera alaya என்ற தனது வலைப்பக்கத்தில் தனது முன்னாள் காதலரான அஜித் குமார் குறித்து ஹீரா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அதில், “இளம் வயதில் தன் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தான் பல வருடங்களாக காதலித்த ஒரு நடிகர், தன்னை ஏமாற்றுபவள், போதைக்கு அடிமையானவள் என்றெல்லாம் பொய் பிரச்சாரம் செய்து தன்னை அசிங்கப்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ”இளம் வயதில் நான் காதலித்து, ஆதரவு கொடுத்த ஒரு நடிகர், ஒரே இரவில் என் வாழ்வின் மிக கொடுமையான மனிதராக மாறினார். அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்த போது, அவருக்கு bedpan மாற்றியது முதற்கொண்டு பல விஷயங்களை நான் செய்தேன். அந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்ட பிறகு, ஒரு பதிலும் கொடுக்காமல் என்னுடனான தொடர்பை அவர் துண்டித்து கொண்டார்.
அந்த நடிகர், தனது படங்களால் ரசிகர்களை வன்முறைக்கு தூண்டுகிறார். மன்னிக்க முடியாத வகையில் எனது கௌரவம், நேர்மை மற்றும் பாதுகாப்பின் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தினார். இவை அனைத்தும் என்னை கடும் மன வேதனைக்கு உள்ளாக்கின. அதனால் எனக்கு தற்கொலை எண்ணம் வந்தது” என ஹீரா கூறியிருக்கிறார்.
அஜித்தின் பெயரை எங்கேயும் குறிப்பிடாமல் வெளியான ஹீராவின் இந்த பதிவு கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. ஆனால் அவர் பத்ம விருது பெறும் இன்றைக்கு சமூக வலைதளங்களில் வைரலானது அவரது ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியது.
மேலும் இந்த பதிவு வைரலான அடுத்த சில மணி நேரங்களில் ஹீராவின் இணையதள பக்கம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.