ஒரு தீவிரவாதியைச் சுற்றி வளைத்த சம்பவத்தின் பின்னணி!
ஒரு திரைப்படம் வெளியாகிற தேதி சில மாதங்களுக்கு முன்னர் முடிவு செய்யப்படுகிறது. சில வேளைகளில் குறிப்பிட்ட திரைப்படங்களில் இடம்பெற்ற உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கலாம். அது தொடர்பான செய்திகள் ஒரு சூழலைக் கட்டமைக்கலாம். பஹல்ஹாம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீரில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கிற ராணுவத்தினர் எத்தகையை சூழல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதைக் காட்டுகிற ‘கிரவுண்ட் ஜீரோ’ திரைப்படம் வெளியாகியிருப்பதையும் அவ்வாறே நோக்க வேண்டியிருக்கிறது. ground zero movie review april 25
பொதுவாக, இது போன்ற நிலையில் வெளியாகிற ’போர்’ வகைமையில் அமைந்த சாதாரண திரைப்படங்கள் கூட ‘அசாதாரணமாக’க் கொண்டாடப்படும்.
தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி, சாய் தமங்கர், ஜோயா ஹுசைன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கிரவுண்ட் ஜீரோ’ அப்படியொரு அசாதாரண வரவேற்பைப் பெறும் வகையில் இருக்கிறதா? ground zero movie review april 25

நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னே..! ground zero movie review april 25
‘பிஸ்டல் கேங்’ எனப்படுகிற கும்பலைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிற வீரர்கள் அருகே வந்து சுட்டுக் கொல்கின்றனர்.
அப்படியொரு சம்பவத்தைக் காட்டுவதில் இருந்து ‘கிரவுண்ட் ஜீரோ’ திரைப்படம் தொடங்குகிறது.
அந்த பிஸ்டல் கேங்கை பிடிப்பதற்கான முயற்சியில், பி.எஸ்.எ.ஃப்பை சேர்ந்த என்.என்.டி. துபே (இம்ரான் ஹாஸ்மி) தலைமையிலான குழு கவனம் செலுத்துகிறது. ஒருநாள் அக்கும்பலின் ரகசிய சங்கேத வார்த்தை பரிமாற்றங்களை ஒற்றறியும்போது, தலைநகரில் தாக்குதல் நடத்த அக்கும்பல் திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. துபே குழுவின் கணிப்புக்கு மாறாக, ஸ்ரீநகரில் இல்லாமல் டெல்லியில் அத்தாக்குதல் நடத்தப்படுகிறது. ground zero movie review april 25
2001ஆம் ஆண்டு நடந்த டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவமே அது.
அதன் பின்னணியில், ‘ஹாஸி பாபா’ எனும் ஜெய்ஸ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி இருப்பதாகச் சொல்கிறது உளவுத் துறை. அவர் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்துகொண்டு இதனைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த ஹாஸி பாபா தாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிற பகுதியில்தான் உலவுவதாகச் சொல்கிறார் துபே. ஆனால், டெல்லியில் இருக்கிற உள்துறை அமைச்சக அதிகாரிகள் அதனைக் கேட்பதாக இல்லை.
அவர்களோடு துபே முரண்படுகிறார். இந்த விஷயம் மேலதிகாரிக்குத் (முகேஷ் திவாரி) தெரிய வர, ‘துறைரீதியாக உன் மேல நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’ என்கிறார்.
இந்த பணியிட முரண்பாடுகள் எதுவும் தனது மனைவிக்கோ (சாய் தமாங்கர்), குழந்தைகளுக்கோ தெரியக் கூடாது என்று விரும்புகிறார் துபே. அதையும் மீறி, அவரது மனைவி மிக எளிதாக நடப்பவற்றைப் புரிந்து கொள்கிறார்.
‘தன்னைப் போன்ற படையினர் காஷ்மீரில் அமைதியோடு இருக்க வேண்டுமானால், அந்த ஹாஸி பாபாவை மிகச்சீக்கிரமாகப் பிடித்தாக வேண்டும்’ என்று நினைக்கிறார் துபே.
அவரால் அதனைச் செய்ய முடிந்ததா? அதற்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்ததா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
உண்மையில், ஹாஸி பாபா எனும் தீவிரவாதியைச் சுற்றி வளைத்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்களை, அவர்களது வாழ்வைச் சொல்கிறது இப்படம்.
இது போன்ற ’போர் முனை’ வகைமை திரைக்கதைகளில் நட்பு, துரோகம், சரணாகதி, உத்வேகம், துடிப்பு, ஆர்ப்பரிப்பு போன்றவை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிற உத்தி பின்பற்றப்படும். ஆனால், ’தினசரி வாழ்வில் ராணுவ வீரர்களுக்கு இவையனைத்தும் இயல்புதானே’ என்று காட்ட முயன்றிருக்கிறது ‘கிரவுண்ட் ஜீரோ’. ground zero movie review april 25
மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியைப் பெற விடாமல் தடுப்பதாக, இப்படத்தின் பலவீனமாக அதுவே தென்படுகிறது.

உண்மைச் சம்பவங்கள்! ground zero movie review april 25
2003ஆம் ஆண்டு ஹாஸி பாபா இருக்குமிடத்தைச் சுற்றி வளைத்து என்.என்.டி.துபே தலைமையிலான பி.எஸ்.எஃப் படை தாக்குதல் நடத்தியபோது, அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்திட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற தீவிரவாதிகள் சிலரைச் சுட்டுக் கொன்றது பி.எஸ்.எஃப் படை.
ஹாஸிபாபா ஆபரேஷன் என அழைக்கப்படுகிற இந்த நடவடிக்கை கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்று என 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ground zero movie review april 25
இதில் சம்பந்தப்பட்ட என்.என்.டி. துபே 2022இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.
அவரையும் அவரைச் சார்ந்த படையினரையும் கௌரவிக்கிற வகையில் தயாரிக்கப்பட்ட இப்படம் மூன்றாண்டுகளாகக் காத்திருப்பில் இருந்து, இப்போது வெளியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் கமல்ஜீத் நேஹி, படத்தொகுப்பாளர் சந்திரசேகர் பிரஜாபதி, தயாரிப்பு வடிவமைப்பாளர் சஷாங் தேரே உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை உள்ளடக்கி மிளிர்கிறது இத்திரைப்படம். அவர்கள் அத்தனை பேரின் உழைப்பும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஜான் ஸ்டீவர்ட் எடூரியின் பின்னணி இசை, நம்மைப் படத்தின் ஒவ்வொரு காட்சியோடும் ஒன்ற வைக்கிறது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் காஷ்மீரில் நிகழ்ந்த குறிப்பிட்ட சம்பவங்களோடு தொடர்புடைய நபர்களை, அவர்களது வாழ்வை நேரில் காணும் உணர்வைப் படம் பார்க்கிற ஒவ்வொருவரும் பெற வேண்டுமென்று விரும்பியிருக்கிறார் இயக்குனர் தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர். அதற்கேற்ற காட்சியாக்கத்தைத் தர மெனக்கெட்டிருக்கிறார். அதனால் திரைக்கதையில், வசனங்களில் ’அதீத’ சித்தரிப்பைப் புகுத்தாமல் தவிர்த்திருக்கிறார்.
ஆனால், போர்முனையில் நிகழ்கிற திரைப்படங்களில் மனதுக்கு உரமூட்டும் எழுச்சி வசனங்களையும், இயல்புக்குப் பொருந்தாத நாடகத்தனமான நடிப்பையும், உண்மையில் இருந்து ரொம்பவே விலகி நிற்கிற புனைவையும் ஏந்தி நிற்கிற படைப்புகளுக்கே தியேட்டரில் ஆரவாரமான வரவேற்பு கிடைக்கும் என்கிறது கடந்த கால அனுபவங்கள். ground zero movie review april 25
இயக்குனரோடு தயாரிப்பு தரப்பு முரண்பட்ட இடமாகவும் அதுவே இருக்க வேண்டும்.
’தியேட்டருக்கு வருகிற ரசிகர்கள் கொண்டாடலாம்’ என்கிற வகையிலான உள்ளடக்கத்தை தேஜாஸ் பிரபா விஜய் தியோஸ்கர் தந்தாலும், ‘இப்படத்தைப் பார்க்கலாமா’ என்கிற ஈர்ப்பைப் பன்மடங்காக்கிற விளம்பர வித்தைகளுக்கு இடமளிக்கும் வகையில் இப்படம் இல்லை. அதுவும் இதன் மீதான வெளிச்சத்தைக் குறைத்திருக்கிறது.
’வழக்கமான கமர்ஷியல் படம்’ போன்று இதன் பெரும்பாலான காட்சிகள் நாயகனாக வரும் இம்ரான் ஹாஸ்மியை வலம் வருவது போன்று அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு நியாயம் சேர்க்கிற வகையில் அவர் ‘சிறப்பாக’ நடித்திருக்கிறார்.
’ஹண்டர்’ படத்தில் அசத்திய சாய் தமாங்கர் இதில் நாயகி. ஒரு ராணுவ வீரரின் மனைவியாக, மிகப்பொருத்தமான நடிப்பை அவர் தந்திருக்கிறார்.
இதில் ‘ஹாஸி பாபா’வாக வரும் ராக்கி ரெய்னா கிளைமேக்ஸில் தான் முகம் காட்டுகிறார். அதனால், அப்பாத்திரத்தின் பின்னணியை விளக்கத் திரைக்கதையில் இடமேதும் இல்லை.
இது போக முகேஷ் திவாரி, தீபக் பரமேஷ், லலித் பிரபாகர், மிர் மெஹ்ரூஸ், ஸோயா ஹுசைன், ராகுல் வோஹ்ரா உட்படப் பெரும்படையே இதில் நடித்திருக்கிறது.
இதன் திரைக்கதை வசனத்தை சஞ்சித் குப்தா, பிரியதர்ஷி ஸ்ரீவஸ்தவா இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். இயக்குனர் தேஜாஸ் விருப்பத்திற்கேற்ப, அவர்களும் அடக்கி வாசித்திருக்கின்றனர். ground zero movie review april 25
காட்சியமைப்பில் யதார்த்தம் இருக்கும் அளவுக்கு ‘சினிமா இலக்கணமும்’ கனகச்சிதமாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் நிலைக்கு முக்கியத்துவம் தருகிற வகையில் இதன் வசனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
இதே உள்ளடக்கத்தை வேறொரு இயக்குனரிடம் கொடுத்திருந்தால், வேறு கலைஞர்கள் இணைந்து இப்படத்தை உருவாக்கியிருந்தால், நிச்சயமாக நாம் பெறும் திரையனுபவம் வேறுவிதமாகவே இருந்திருக்கும்.
சம்பந்தப்பட்ட படக்குழுவினரின் மனநிலை ஒரு படைப்பில் எந்தளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதற்கு ‘கிரவுண்ட் ஜீரோ’ ஒரு உதாரணம்.
தற்போது பஹல்ஹாம் தாக்குதலால் நிகழ்ந்திருக்கிற சூழலுக்கு ஏற்ற வகையில், இயக்குனர் தேஜாஸ் உருவாக்கிய இப்படம் ரசிகர்களுக்கு உத்வேகம் ஊட்டுகிற ஒரு ‘போர்முனை’ படைப்பாக அமையவில்லை. அது ஏன் நிகழவில்லை என்பதற்கான காரண காரியங்கள் நமக்குத் தேவையில்லாதது.
அதைத் தாண்டி, ‘இயக்குனர் காட்டுகிற உலகம் இயல்பானதா, உண்மைக்கு நெருக்கமானதா’ என்றறிய விரும்புபவர்களுக்கு மட்டும் இந்த ‘கிரவுண்ட் ஜீரோ’ பிடிக்கும்..!