இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி தனது 500 வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ரோகித் சர்மா 143 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 80 ரன்கள் எடுத்தார். இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வந்த சுப்மன் கில் 12 பந்துகள் மட்டுமே தாக்கு பிடித்தார். அதன்படி 10 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரஹானே 8 ரன்களில் நடையைக் கட்டினார்.
இதையடுத்து விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி களமிறங்கியது.
இந்நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 100 வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்ற முறையிலும், விராட் கோலியின் 500 வது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்ற முறையில் அவர் சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.
அதன்படி தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 180 வது பந்தில் பவுண்டரி மூலம் சதத்தை நிறைவு செய்தார்.
மொத்தமாக 206 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகள் அடக்கம். மேலும், இது விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 76 வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்