2027-ம் ஆண்டுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தள்ளிப்போட்டிருப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டம் அம்பலமாகி உள்ளதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 2027 Census a Conspiracy
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு கூறியிருந்ததாவது: சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் பற்றிய அறிவிக்கை, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் பிரிவு 3-ன்படி, 16.06.2025 (தோராயமாக) அன்று அரசிதழில் வெளியிடப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990-ன் படி இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியலிடுதல் (2010 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை), இரண்டாவது கட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (2011 பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 28 வரை), இதற்கான வரம்பு தேதி 2011 மார்ச் 01, 00:00 மணியாக இருந்தது. ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான வரம்பு தேதி 2010 அக்டோபர் 01, 00:00 மணியாக இருந்தது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-க்கான முதல்கட்ட தயாரிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், களப்பணி சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020 ஏப்ரல் 1 முதல் தொடங்கவிருந்தது. இருப்பினும் நாடு முழுவதும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைக்கப்பட்டது.