இலக்கு 2024 அல்ல 2026 : அன்புமணி ராமதாஸ்

Published On:

| By Kavi

2026 தேர்தல் தான் பாமகவுக்கு இலக்கு என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக வெற்றி பெறவில்லை. தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணியும் வெற்றி பெறவில்லை.

தேர்தல் தோல்வி குறித்து இன்று (ஜூன் 6) அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி ராமதாஸ்,

“நமது இலக்கு மக்களவைத் தேர்தல் அல்ல, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை தெளிவு படுத்தியிருந்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் வீறுநடை போட வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

ஆளும் திமுக அதன் அதிகார வலிமை, பண வலிமை, படை வலிமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, அதன் வாக்கு வங்கி 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட 7 விழுக்காடு குறைந்திருக்கிறது.

ஆண்ட கட்சியான அதிமுக கடந்த தேர்தலை விட மூன்றில் ஒரு பங்கு இடங்களில் கூடுதலாக போட்டியிட்டு இருந்தாலும் கூட, அந்தக் கட்சியால் 2019 இல் பெற்ற வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை.

இன்னும் கேட்டால் 2021 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 13 விழுக்காடு குறைவாகவே பெற்றுள்ளது. இந்த இரு கட்சிகளும் இல்லாத ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இதை அனைவரும் உணர வேண்டும்.

தமிழ்நாட்டை 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

மாறாக ராஜாஜி, உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்டு, காமராசர், அண்ணா போன்றவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த மதுவிலக்கு அதிமுக, திமுக ஆட்சிக்காலங்களில் தான் சிதைக்கப்பட்டது.

அதன் விளைவு பள்ளிக் குழந்தைகள் கூட மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்துத் தெருக்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் கடந்து கொள்கை வகுப்பதன் மூலம் அரசின் வருவாயைப் பெருக்க வேண்டிய அரசு, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம், அதிக அளவில் மதுவை விற்பதன் மூலமும் வருவாய் ஈட்டி, அதைக் கொண்டு அடிப்படைச் செலவுகளை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது. இது பேரவலமாகும்.

மதுவை விட பெரும் ஆபத்தாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் உருவெடுத்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத பகுதிகளில் கூட கஞ்சா தாராளமாகக் கிடைக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் ஆசிரியர்களைத் தாக்கும் அவலம் நிலவுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள், கொள்ளைகள் ஆகியவை அதிகரிக்கவும் கஞ்சா போதையே காரணம்.

இன்னொருபுறம் ஆற்று மணல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்து ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்படுகின்றன. நிர்வாகச் சீர்கேடுகளின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் அரசு தோல்வியடைந்து வருகிறது.

அரசு பள்ளிகளில் தரமானக் கல்வியையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கூட அதிமுக, திமுக அரசுகளால் வழங்க முடியவில்லை. திமுகவுக்கு ஆதரவாக குன்று போல நின்று ஆதரவளித்து வந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது வெறுப்பு மற்றும் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் உள்ளிட்ட ஏராளமான
உரிமைகளை திமுக, அதிமுக அரசுகள் பறித்து விட்டன. அதற்கு பழிவாங்க அவர்களும் காத்திருக்கின்றனர்.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு எதிர்கொண்ட அனைத்துச் சீரழிவுகளையும் சரி செய்வதற்கான அருமருந்து பாட்டாளி மக்கள் கட்சியிடம் தான் உள்ளது.

2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கு ஏற்ற வகையில் 2024 தேர்தலில் அதிமுகவும், திமுகவும் இல்லாத அணியை பாட்டாளி மக்கள் கட்சி கட்டமைத்தது.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் திமுக, அதிமுக அல்லாத ஆட்சி என்பதாகவே உள்ளது. இத்தகைய சூழலில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயலாமல் இருப்பது கடமை தவறிய செயலாக அமைந்து விடும். அந்தத் தவறை பா.ம.க. செய்யாது.

தமிழ்நாட்டு அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி பல சரிவுகளை சந்தித்தாலும், அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இப்போதும் அதேபோல் மீண்டு வருவோம். அதில் உங்களுக்கு எந்த ஐயமும், கவலையும் தேவையில்லை. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் நமக்கு சாதகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘பிடி சார்’ படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டா? விநியோகஸ்தர்கள் சொல்வது என்ன?

”பிரேமலதாவின் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” : மாணிக்கம் தாகூர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share