அரியலூர் துளாரங்குறிச்சி பகுதியில் கனமழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (46). விவசாய கூலியான இவர் தனது வீட்டின் கூரையை மாற்றி அமைக்க திட்டமிட்டிருந்தார். துளாரங்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன் (60) என்பவருடன் சேர்ந்து இன்று (அக்டோபர் 24) மழையில் நனைந்து ஊறிய நிலையில் இருந்த வீட்டின் கூரையை பிரித்து அகற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மழையில் நனைந்து ஊறிய நிலையில் காணப்பட்ட மண் சுவரானது உள்பக்கமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் அன்பழகனும், ராமச்சந்திரனும் சிக்கிக் கொண்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் 100 நாள் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் ஓடி வந்து மண் சுவற்றை அகற்றி பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டனர்.
ஆனால் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அன்பழகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
