தீபாவளியையொட்டி கூடுதல் விடுமுறை விடப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக நாளை (அக்டோபர் 25) பணி நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
கடந்த அக்டோபர் 20ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது.
பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை சொந்த ஊர் சென்ற மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது பணியிடங்களுக்கு திரும்பவதற்கு வசதியாக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25 சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தீபாவளியையொட்டி கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அளிக்கப்பட்ட பொது விடுமுறையை ஈடு செய்யும் வகையில், அனைத்து அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நாளை அக்டோபர் 25ம் தேதி சனிக்கிழமை முழு நேரம் செவ்வாய்கிழமை அட்டவணைப்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் போன்று புதுச்சேரியில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆயுதபூஜையையொட்டி 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை 25ம் தேதி அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வழக்கம் போல் வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
