கலைத்துறையில் கடந்த 35 வருடங்களாக நடிகர் அஜித் குமார் செய்து வரும் சேவையை பாராட்டி அவருக்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. why padma bhushan ajithkumar went to apollo hospital
அதன்படி கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அஜித்துக்கு விருது வழங்கி கௌரவித்தார். அந்த நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் கலந்துகொண்டார்.
தொடர்ந்து நேற்று இரவு சென்னை திரும்பிய அஜித்குமார், அப்பல்லோ மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 30) காலை அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதுதொடர்பாக அவருக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது,
”பொதுவாக அஜித் குமார் தனது படத்தில் இடம்பெறும் சண்டை, நடனம் உள்ளிட்ட காட்சிகளின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னதாக மருத்துவமனை சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.
அப்போது, ஏற்கெனவே செய்யப்பட்ட அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதி எப்படி இருக்கிறது, பிபி, சுகர் உள்ளிட்ட முக்கிய பரிசோதனைகளை செய்து மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொள்வார். அவர்கள் பரிந்துரைகளை ஏற்று, அதன் பின்னர் தான் படப்பிடிப்புக்கு செல்வார்.

தற்போது அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, கார் பந்தயத்திலும் அவர் தீவிரம் காட்டி வருகிறார். அதில் பங்கேற்பதற்கு உடல் தகுதி என்பது ரொம்ப முக்கியம்.
அதன்படி வரும் மே 18ஆம் தேதி நெதர்லாந்தில் சாண்ட்வூர்ட் சர்க்கியூட்டில் நடைபெற உள்ள ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தயத் தொடரில் பங்கேற்க உள்ளார்.
அதற்காக தான் டெல்லியில் இருந்து சென்னை திரும்பியதும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தனது வழக்கமான முழு உடல் பரிசோதனை செய்ய சென்றிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளனர்.