இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா இன்று (ஜூன் 22) தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள் வெற்றிகரமாக தகர்த்தெறியப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள நடான்ஸ், ஃபோர்டோ மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. இதில் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் அமெரிக்காவின் முதன்மை இலக்காக இருந்தது. What is Iran Fordow nuclear site
ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தை குறிவைக்க காரணம் என்ன?
ஃபோர்டோவில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையம் தெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ஈரான் இந்த அணுசக்தி நிலையத்தின் கட்டுமான பணிகளை தொடங்கியது. இருப்பினும், ஃபோர்டோ அணுசக்தி நிலையம் குறித்த தகவல்களை மிகவும் ரகசியமாகவே ஈரான் பாதுகாத்து வந்தது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மேற்கத்திய உளவுத்துறை இந்த அணுசக்தி நிலையத்தின் இருப்பு பற்றி அறிந்த பிறகுதான், 2009-ஆம் ஆண்டு ஐ.நா.அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிற்கு ஈரான் இந்த அணுசக்தி நிலையம் குறித்து தகவல் தெரிவித்தது.
வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையில், மலையின் கீழ் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. பதுங்கு குழி வெடிகுண்டுகள் மூலம் மட்டுமே இந்த அணுசக்தி நிலையத்தை தாக்க முடியும் என்று ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், GBU-57 A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் குண்டை அமெரிக்கா பயன்படுத்தி இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
தோராயமாக 13,600 கிலோகிராம் எடையுள்ள இந்த குண்டு, ஆழமாகப் புதைக்கப்பட்ட மற்றும் கடினப்படுத்தப்பட்ட பதுங்கு குழிகள் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுகளை தாங்கக்கூடிய B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானத்தை இந்த தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.
ஃபோர்டோ அணுசக்தி நிலையம் தகர்த்தெறியப்பட்டது குறித்து டிரம்ப் கூறும்போது, “இந்த பயங்கரமான அழிவுகரமான அணுசக்தி நிலையத்தை ஈரான் கட்டியெழுப்பும்போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டிருக்கிறார்கள். ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தை அழிப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. இந்த தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.