மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய வக்ஃபு வாரிய சட்டத்துக்கு முழுமையாக தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இந்த சட்டத்தின் சில விதிகளுக்கு மட்டும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த ஏப்ரல் 8-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. திமுக, தவெக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பெஞ்ச், வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாக நியமிக்க கூடாது; வக்பு சொத்துகளை புதிய சட்டத்தின் கீழ் ஆட்சியர்கள் வரையறை செய்யக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான பெஞ்ச், வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கில் இன்று (செப்டம்பர் 15) தீர்ப்பளித்தது.
வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்கள்:
- வக்ஃபு சட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க எந்த முகாந்திரமும் இல்லை.
- வக்ஃபு வாரியத்தித்தில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் உறுப்பினர்கள் எண்ணிக்கை 3-க்கு மேல் இருக்கக் கூடாது.
- வக்ஃபு வாரியத்துக்கு சொத்தை வழங்கும் நபர் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்ப்பற்றி இருக்க வேண்டும் எனற விதிக்கு தடை விதிக்கப்படுகிறது. வக்ஃபு வாரியத்துக்கு சொத்து அளிக்கும் தனிபட்ட நபரின் உரிமை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு செய்ய முடியாது.