ஆயுஷ்மான் பாரத்: முதியவர்களின் மருத்துவ சுமையை குறைக்குமா தமிழக அரசு?

Published On:

| By Pandeeswari Gurusamy

AB PM JAY scheme status in Tamil Nadu

கடந்த 2024 அக்டோபர் 29 அன்று, மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்ய யோஜனா (AB PM-JAY) திட்டத்தை விரிவாக்கி அறிவிப்பை வெளியிட்டது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும், தங்கள் சமூக-பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் நாடு முழுவதும் 6 கோடி முதியவர்களையும், 4.5 கோடி குடும்பங்களையும் உள்ளடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 43.19 லட்சம் முதியவர்கள், அதாவது 32.35 லட்சம் குடும்பங்கள்,பயன் அடைவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டம் அமலாகி ஒரு வருடம் கடந்த பின்னரும், தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் காரணமாக
இந்த திட்டம் தற்போதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT
மத்திய -மாநில இழுபறி: எங்கே தொடங்கியது பிரச்சினை?

கடந்த 2018 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம், “பொருளாதார ரீதியாக பின்தங்கிய 40% மக்களுக்கு” இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவ சிகிச்சைகளை, பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

ஆனால், “பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்” என்ற வரையறையை முடிவு செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கடும் கருத்து வேறுபாடு தொடங்கியது. மத்திய அரசு 2011 சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை (SECC) அடிப்படையாகக் கொண்டுள்ளது. , தமிழ்நாடு அரசு ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானமாக 2.12 லட்சம் ரூபாயை அளவுகோலாக எடுத்துக்கொள்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (CMCHIS) மூலம் 1.48 கோடி குடும்பங்கள் பயனடைகின்றன.

ADVERTISEMENT

இதில் 86.5 லட்சம் குடும்பங்கள் CMCHIS மற்றும் PM-JAY இணைந்த திட்டத்தின் கீழ் உள்ளன. மத்திய அரசு, இந்த 86.5 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஆண்டு பிரீமியத்தில் (குடும்பத்திற்கு 1,849 ரூபாய்) 60% பங்களிப்பை வழங்குகிறது. மீதமுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு மாநில அரசே முழு பிரீமியத்தை செலுத்துகிறது. மேலும், உயர்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கு 12 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கி வருகிறது.

“70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருளாதார வரம்பை மத்திய அரசு நீக்கியுள்ள நிலையில், தங்கள் மதிப்பீட்டின்படி பொருளாதார ரீதியாக பின்தங்கிய 60 லட்சம் மக்களுக்கு 60% பிரீமியத்தை மத்திய அரசு ஏற்க வேண்டும்,” என மாநில அரசு எதிர்பார்க்கிறது.

ADVERTISEMENT
நிதிச் சுமையும் எதிர்பார்ப்புகளும்

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பிரீமியம் பங்களிப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற விகிதத்தில் பகிரப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மூன்று இமயமலை மாநிலங்களில் மத்திய அரசு 90% வரை பொறுப்பேற்கிறது. தமிழ்நாட்டில் தற்போது மத்திய அரசு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாயும், மாநில அரசு 200 கோடி ரூபாயும் செலவிடுகின்றன. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருளாதார வரம்பு இல்லாமல் திட்டத்தை விரிவாக்கினால், மாநில அரசு கூடுதலாக 1,200 கோடி ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக உள்ள சூழலில் முதியவர்களின் வாழ்நாள் மற்றும் அவர்களின் மருத்துவ செலவுகள் அதிகமாக இருப்பதால், இந்த நிதிச் சுமை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசு மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தாலும், இதுவரை இறுதி தெளிவான முடிவு எட்டப்படவில்லை கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதியோர்: பயனாளிகளின் எண்ணிக்கை

தேசிய சுகாதார ஆணையத்தின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் தற்போது 4.06 லட்சம் முதியவர்கள் மற்றும் 3.69 லட்சம் குடும்பங்கள் PM-JAY தரவுத்தளத்தில் உள்ளனர். புதிய பயனாளிகளாக 39.13 லட்சம் மக்கள் மற்றும் 28.66 லட்சம் குடும்பங்கள் சேர்க்கப்படலாம். 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, மாநிலத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 53.12 லட்சமாக இருந்தது. இந்தப் புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்துகின்றன.

முன்னோக்கி செல்ல வேண்டிய பாதை

தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு – 35க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட/தாலுகா அரசு மருத்துவமனைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளதால், திட்டம் நடைமுறைக்கு வந்தால் அதை செயல்படுத்தும் திறன் வலுவாக இருக்கும்.

முதியவர்களின் நோய் சுமை – மாநில சுகாதார ஆய்வுகளின் படி, 70 வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 45% பேருக்கு உயர் இரத்த அழுத்தம், 30% பேருக்கு சர்க்கரை நோய்,சுமார் 20% பேருக்கு இதய நோய் அல்லது தொடர்புடைய பிரச்சினைகள் உள்ளன. இதனால் மருத்துவச் செலவுகள் இயல்பாகவே அதிகரிக்கின்றன. முதியவர்களின் மருத்துவச் செலவுகள் குறைந்தால், குடும்பத்தின் பிற உறுப்பினர்களின் கல்வி, வாழ்வாதாரம், பெண்களின் வேலை வாய்ப்பு போன்றவை நேரடியாகப் பயன்பெறும்.

அதே சமயம் மத்திய அரசு கல்வி உள்ளிட்ட பல திட்டங்களுக்கான வரியை கொடுப்பதில் காலதாமம் செய்வதால் அதற்கான நிதிச்சுமையையும் மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. இதனால் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்ய யோஜனா விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து, பொருளாதார வரம்பு மற்றும் பயனாளிகள் தேர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். முதியவர்களின் மருத்துவத் தேவைகள் நிறைவேற, இரு அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

இந்தத் திட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், முதியவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவர்களின் மருத்துவச் செலவு சுமை கணிசமாகக் குறையும். இதற்கு மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share