”ராமை முதன்முதலில் பார்த்து காண்டாகிட்டேன்” – வெற்றிமாறன் ஓபன் டாக்!

Published On:

| By christopher

vetrimaran shocked while first meeting with ram

தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, தற்போது வெற்றிகரமான இயக்குநர்களாக திகழ்பவர்களில் முக்கியமானவர்கள் ராம் மற்றும் வெற்றி மாறன். vetrimaran shocked while first meeting with ram

இருவருமே மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்து சினிமா பயின்றவர்கள்.

வெற்றிமாறன், பொல்லாதவன், அசூரன், வடசென்னை, விடுதலை என முன்னணி நடிகர்களுடன் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி பேரன்பு என அற்புதமான திரைக்கதைகளைத் தொடர்ந்து தற்போது ’பறந்து போ’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராம். மிர்ச்சி சிவா, அஞ்சலி இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இயக்குநர்கள் ராம் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளனர்.

ஒரு பையன் வந்து கதை சொன்னான் டா…

அதில் வெற்றிமாறன் பேசுகையில், ”நான் எப்போதும் அலுவலகத்திற்கு லேட்டாக தான் போவேன். ஒருநாள் நான் சீக்கிரமாக போய்விட்டேன். அன்று பாலுமகேந்திரா சார் ரொம்ப சந்தோசமாக இருந்தார். அவர் என்னிடம், “ஒரு பையன் வந்து கதை சொன்னான் டா, நான் அவனுக்கு சினிமோட்டோகிராபி பண்ணலாம்னு இருக்கேன்” என சொன்னார். எனக்கு ஒரே ஷாக்.

மகேந்திரன், பாலச்சந்தர், மணி ரத்னம் இவங்களோட முதல் படத்துக்கு அவர் தான் கேமிரா. ”மணிக்கு அப்புறம் யாரும் இன்ஸ்பையர் பண்ற அளவுக்கு கதை சொல்லலடா” என அடிக்கடி சொல்வார். அந்த வரிசையில் யார்ரா அந்த ஆளுனு இருந்துச்சி.

அதுக்கப்புறம் இரண்டு நாள் கழிச்சி, ”ராமசுப்பு இப்போதான் வந்து பேசிட்டு போனான்’னு சொன்னாரு. அய்யோ இன்னைக்கும் பாக்க முடியலையடானு வருத்தப்பட்டேன். ”டேய் அவன் சொல்றது எல்லாம் எடுக்க முடியுமானு தெரியல.. ஆனா எடுத்துட்டா அது இந்திய சினிமால ஒரு முக்கியமான படமா இருக்கும்” என்றார்.

அதுக்கப்புறம் ஒரு 10 நாள் கழிச்சி, நான் ஆபிசுக்கு வர்றேன். இவர் அங்கிருந்து போறார். அப்போ அவர பத்தி எங்கிட்ட பாலு சார் சொன்னதும், உடனே டீக்கடைக்கு போய் அங்க அவர பாத்தேன். காலைல 10 மணிக்கு சந்திச்சோம்.. மதியம் ஒரு மணி வரை பேசிட்டு இருந்தோம். அதுக்கப்புறம் பல தடவை டீக்கடைல நின்னு பேசுவோம். நைட்டு தான் எங்க டிஸ்கஸன் இருக்கும். அதனால டீக்கடைல கடைசியா டீக்குடிக்கிறது, மறுநாள் காலைல முதல்ல டீக்குடிக்கிறதும் நாங்களா தான் இருப்போம்” என தங்களது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை நினைவுக் கூர்ந்தார் வெற்றிமாறன்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் திரைப்படமும், ராமின் முதல் படமான கற்றது தமிழ் திரைப்படமும், ஒரே நேரத்தில் தயாராகி 2007ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share