கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டா கத்தியுடன் தவெக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை ஒட்டி, அக்கட்சியினர் நேற்றைய தினம் (ஜூன் 22) தமிழகம் முழுவதும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். tvk cadres fight in krishnagiri police filed fir
இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி தபு என்கிற தப்ரீஷ் தனது நண்பர்களுடன் இரண்டு கார்களில் கீழ் புதூர் பகுதிக்கு சென்று கட்சி கொடியேற்றி, மரம் நட்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
அப்போது கீழ் புதூர் பகுதியை சேர்ந்த தவெக கிளை தலைவர் விஜய் (எ) நாகராஜ், “இது என்னுடைய ஏரியா? இங்கு வந்து எப்படி நீங்கள் நிகழ்ச்சி நடத்தலாம்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது தபு என்கிற தப்ரீஸ் தன்னிடம் இருந்த பட்டா கத்தியை எடுத்து நாகராஜ் தரப்பினரை தாக்கியதாக தெரிகிறது. இதற்கு நாகராஜ் தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பார்த்திபன், முருகேசன், சூர்யா, அருண், ஹரிராம், சஞ்சய் ஆகியோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த ஆறு பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மோதல் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விஜய் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது மாவட்ட செயலாளர் சத்யாவிடம், அக்கட்சி நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“விஜய் மக்கள் மன்றத்தில் 13 வருடங்களாக இருக்கிறேன். தற்போது கட்சியில் 2 ஆண்டுகளாக இருக்கிறேன். ஆரணி பகுதியை சேர்ந்த என்னை விழாவுக்கு ஏன் அழைக்கவில்லை?” என்று மாவட்ட செயலாளரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், மாவட்ட செயலாளார் சத்யா, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர் என்றும் கட்சியில் பணம் இருப்பவர்களுக்கே பதவி வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. tvk cadres fight in krishnagiri police filed fir