கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று திமுக மாநிலங்களை தலைவரும் துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா இன்று (ஜூன் 18) தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்க மறுப்பதாக திமுக மாணவரணி சார்பில் மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா பேசும்போது, Trichy siva says we will freeze parliament
“ஹரப்பா கலாச்சாரம் தான் இந்தியாவின் மூத்த கலாச்சாரம் என்று சொல்லப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவு சிந்துவெளி நாகரிகம் கிறிஸ்துவுக்கு 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிவித்தது. ஆனால், கீழடி ஆராய்ச்சி முடிவுகள் தமிழர்களின் நாகரிகம் கிறிஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்திருக்கிறது.
ஆனால், அதனை இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. வடக்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில். தெற்கே இருப்பவர்கள் சொல்வதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில். அப்படி இருக்கும்போது ஏன் கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கிறீர்கள்?
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். சரஸ்வதி என்பது ஒரு நதியின் பெயர். அது இருந்ததற்கான சுவடு கிடையாது. புராணங்களில் மட்டுமே சொல்லப்படுகிற சரஸ்வதி நாகரிகத்தை புதுப்பிக்க நினைக்கிறார்கள்.
நாடாளுமன்றம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தில் நாங்கள் முதலில் எடுக்கப்போவது கீழடி பிரச்சனையை தான். கீழடி ஆய்வறிக்கையை அங்கீகரிக்காவிட்டால் நாடாளுமன்றத்தை நடக்க விட மாட்டோம். பாஜக அரசை ஸ்தம்பிக்க செய்வோம். திமுக மட்டுமல்ல எதிர்க்கட்சிகளையும் கிளர்ந்து எழச்செய்வோம்” என்று தெரிவித்தார்.