பாஜகவுடன் நெருக்கம்.. சீமான் போல தந்தை பெரியாரை விமர்சிக்க தயாராகும் அன்புமணி!

Published On:

| By Minnambalam Desk

Anbumani periyar

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தந்தை பெரியாரை விமர்சிக்கும் பேச்சுகளையும் தொடங்கி இருப்பது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது. To Align with BJP, Is Anbumani Ready to Criticize Periyar Like Seeman?

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில், திகவில் எதற்காக அண்ணாதுரை இணைந்தார் என கேள்வி கேட்டுள்ளனர்; திகவில் இருந்து எதற்காக அண்ணாதுரை பிரிந்தார் என கேட்டிருக்க வேண்டும் என்றார். (தந்தை பெரியார்- அன்னை மணியம்மை திருமண நிகழ்வை காரணமாக காட்டி, திகவில் இருந்து அண்ணா வெளியேறினார்)

மேலும் திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் வன்னியர் சமுதாயம். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் வெற்றி பெற்றவர்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். திமுகவில் 23 எம்.எல்.ஏக்கள் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 21 எம்.எல்.ஏக்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்த இரு சமூகங்களுக்கும் திமுக எதுவும் செய்யவில்லை. இந்த இரு சமூகங்களுக்கும் திமுக துரோகம் மட்டும்தான் செய்துள்ளது.

திமுகவுக்கு முதல்வர் பதவியை கொடுத்ததும் இந்த சமூகங்கள்தான். நீங்கள் ஆட்சியில் இருக்க காரணமே இந்த இரு சமூகங்கள்தான். உங்களைச் சுற்றி வியாபாரிகளைத்தான் வைத்திருக்கிறீர்கள். இந்த சமூகங்களை குப்பையில் தூக்கி போட்டுவிட்டீர்கள்.

மாமல்லபுரம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை பார்த்து மிரண்டது திமுக. அதன்பிறகுதான் பாமகவில் குழப்பத்தை உருவாக்கியது திமுக. என்னால் நிறைய வெளியே சொல்ல முடியவில்லை. அதை சொல்லவும் ஒரு காலம் வரும் எனவும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அன்புமணியின் இந்த பேச்சு பெரியார் தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய பெரியார் தொண்டர்கள், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கை வழி நடப்பதாக அறிவித்த கட்சி பாமக. பாமக அடையாளப்படுத்தும் தலைவர்களில் தந்தை பெரியாரும் இடம் பெற்றுள்ளார்.

தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர முயற்சிக்கும் அன்புமணி ராமாதாஸ், தந்தை பெரியாரை விமர்சிக்கவும் தொடங்கி இருக்கிறார். திகவில் இருந்து அண்ணாதுரை ஏன் பிரிந்தார் என கேள்வி கேட்கலாமே என அன்புமணி கூறியிருப்பது, தந்தை பெரியார்- அன்னை மணியம்மையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வை பாஜக, நாம் தமிழர் கட்சியினரைப் போல கொச்சைப்படுத்துவதாகும். பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்துவுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதாக சொல்லும் அன்புமணி ராமதாஸ், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படிக்காமல் இப்படி பாஜக, நாம் தமிழர் கட்சியினரைப் போல கொச்சைப்படுத்தும் முயற்சிகளில் இறங்குவது தவறான போக்கு என்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share