திருச்செந்தூரைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜூலை 14-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டிய யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் அனுமதிக்கப்படவில்லை என சர்ச்சை வெடித்துள்ளது. Thirupparankundram Murugan Temple
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அண்மையில் வெகுவிமரிசையாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து முருகனின் திருத்தலங்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு ஜூலை 14-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜை ஜூலை 10-ந் தேதி மாலை தொடங்கியது. ஜூலை 14-ந் தேதி வரை 8 கால யாகசாலை பூஜை நடைபெறும். இதன் பின்னர் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் யாகசாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ் பெண் ஓதுவார்கள் அங்கே உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் சிவாச்சாரியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் தமிழ் பெண் ஓதுவார்கள்- சிவாச்சாரியார்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இது தொடர்பாக தமிழ் பெண் ஓதுவார் சத்யபாமா அம்மையார் கூறுகையில், அனைத்து திருக்கோவில்களிலும் குடமுழுக்கு நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறவர்கள் நாங்கள். இந்த குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்படுகிறது என அனைவரும் சொல்கின்றனர். ஆனால் தமிழ் வேள்வியாளர்கள் இந்த யாகசாலையில் இல்லை. இதை ஆய்வு செய்ய சென்ற போது சிவாச்சாரியார்கள் தடுத்து நிறுத்தினர். பிராமண சமஸ்கிருத வேள்வியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து கொண்டு தமிழ் வேள்வியாளர்களை யாகசாலை பூஜைகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
