தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து பெயர் பெற்றவர் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். அதனை தயாரித்தது ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். thirukural movie trailer review
தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாழ்க்கையைத் தழுவி ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று (ஜூன் 8) வெளியானது. அதில் திருவள்ளுவர் பேசும் காதல் ரசம் சொட்டும் வசனங்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. மேலும் அணங்கு, பசலை போன்ற சங்கத்தமிழ் வார்த்தைகளும் ‘அப்படினா என்ன’ என்ற ஆர்வத்தை தூண்டுகின்றன.
அதனைத் தொடர்ந்து வரும் தீப்பொறி பறக்கும் அரசியல் வசனங்கள், அந்த காலத்திலும் தமிழ் சமூகம் எப்படி இருந்தது என்பதை குறிப்பிடும் வகையில் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக, ’சமயவாதிகள் அரசியலில் தலையிடுவதை தமிழ்நாட்டு அரசவை ஒருபோதும் அனுமதிக்கிறது இல்ல’, மன்னர்களே அறம் வழுவறப்போ, அது மக்கள் கிட்டேயும் எதிரொலிக்கத் தானே செய்யும்’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

தொடர்ந்து சங்க கால தமிழர்களின் போர் மரபையும், அரசாட்சியையும் விளக்கும் வகையில் வசனங்கள் உள்ளன.
இறுதியாக, ”யார் யாரெல்லாம் தங்களோட கருத்தை என் குறள் மீது வைக்க போறாங்களோ? என் மேல என்னென்ன சாயங்கள் பூசப் போறாங்களோ தெரியலையே?” என திருவள்ளுவரே புலம்பும் வசனங்கள் தற்காலத்தில் அவரை வைத்து நடக்கும் அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றன.
இதற்கெல்லாம் பலமாக இளையராஜாவின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் எட்வின் சக்காயின் ஒளிப்பதிவும் டிரெய்லரை இன்னும் அழகாய் காட்டுகின்றன.
ஏற்கெனவே இப்படத்தில் இடம்பெற்ற கொத்துக் கொத்தாய் கதிர், முல்லை வாசம் போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் படத்தின் மீதான ஆர்வத்தை எழுப்பியுள்ளது.