அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மயிலாப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் அவருடன் தமிழிசை சவுந்தரராஜனும் பங்கேற்றார்.
பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று மதியம் தொகுதி பட்டியல் வெளியிட்டவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜனிடம், ‘நீங்கள் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா? எந்த தொகுதி?” என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ‘எதுவாக இருந்தாலும், கட்சி அறிவிக்கும்’ என்று பதிலளித்தார்.
இந்தநிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியான மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது உரையை நிறைவு செய்த போது, பிரச்சார வாகனத்திலிருந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், மேலே இருக்கும் திறந்த வெளி பகுதியில் எடப்பாடியுடன் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தவாறு வாக்கு சேகரித்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழிசை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தில் பங்கேற்றது பேசுபொருளானது.
இதுதொடர்பாக பாஜக தரப்பில் கேட்டபோது, ‘தமிழிசை சவுந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதை தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழிசையை அழைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்’ என்கிறார்கள்.
