நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை கோவாவில், 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா – இந்தியன் பனோரமா-நடைபெற இருக்கிறது.
இதற்கு,இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை தமிழ்க் குறும்படம் (Official Selection) தேர்வாகி இருக்கிறது.
“பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்றுப் போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ஆநிரை. இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். “என்கிறார் கணேஷ் பாபு
ஏற்கனவே இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற, ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்..அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி,மீரா, கௌரிசங்கர், காமாட்சி சுந்தரம், இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு – பி.செல்லத்துரை, படத்தொகுப்பு – டி.பன்னீர்செல்வம், ஆடியோகிராபி – யுகேஐ – ஐயப்பன்
பழந்தமிழ் மன்னர்கள் ஒரு நாட்டின் மீது போர் எடுக்க முற்படுகையில் அந்த நாட்டின் பசுக்கள் முதலிய கால்நடைகளை முதலில் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்கு கொண்டு வருவார்கள். இழந்த மன்னன் கோபப்பட போர் துவங்கும். இலக்கியத்தில் இதற்கு ஆநிரை கவர்தல் என்று பெயர் . ஆநிறை என்பதே சரியான சொல். பின்னர் அது மருவி ஆநிரை என்று ஆனது.
ஆ நிறை என்றால் பசுக்களின் மந்தை என்று பொருள். ஆனால் ஒற்றைப் பசு பற்றிய இந்தக் கதைக்கு ஆநிரை (ஆ நிறை) என்ற பெயர் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. படத்துக்குள் எதாவது சம்பவம் இருக்கலாம்
இந்த ஆநிரை விருதுகளைக் கவர்ந்து வரட்டும்
- ராஜ திருமகன்
