சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் மீதான வழக்கை, சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் இன்று (ஜூன் 19) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி ஏடிஜிபி ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். Supreme Court transfer adgp jayaraman
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் சித்தார்த் தேவ் ஆஜராகி, “இந்த வழக்கை நாங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்க உள்ளோம். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏடிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. 1969 ஆம் ஆண்டு அகில இந்திய சேவை விதிகளின் விதி 3 இன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஆள் கடத்தல் வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதேவேளையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடுகிறோம் ” என்றனர்.
அப்போது ஜெயராம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆதித்ய குமார் செளத்ரி,
“உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முன்பாக ஏடிஜிபி மீது எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. அவரிடம் 24 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை தொடர்பாக அவருக்கு எந்தவிதமான நோட்டீஸும் கொடுக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் விடுவித்தனர். எஃப்.ஐ.ஆரில் அவர் பெயர் இல்லை. மேலும், ஆள் கடத்தல் வழக்கில் சிறுவனின் தாய் இந்த வழக்கை முடித்துவைக்க விரும்புவதாக ஜூன் 11-ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.
அதற்கு நீதிபதிகள், “அரசு உங்களை இடைநீக்கம் செய்ய விரும்பினால், அதற்கு நாங்கள் இடையூறாக இருக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவை நாங்கள் ரத்து செய்கிறோம்” என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர். Supreme Court transfer adgp jayaraman