தமிழகத்தில் மூன்று முறை முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், இன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், “முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ. பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர், திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!”
எனத் தெரிவித்துள்ளார்.
